9 பவுன் கொள்ளையனை பிடிக்க "சினிசேசிங்" நடத்திய போலீஸ்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே விழுந்தயம்பலத்தில் அதிகாலை நேரத்தில் தண்ணீர்பிடிப்பதாகக் கூறி பெண்ணிடம் இருந்து 9 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளைக்காரனை சினிமா பாணியில் போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர்.
விழுந்தயம்பலம் அருகே அருவையைச் சேர்ந்த ஸ்டீபனின் மனைவி அகிலா இன்று அதிகாலை 5.30மணிக்கு வீட்டின் முன்பாக தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் கேன் ஒன்றை நீட்டி நானும் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அகிலாவும் பரிதாப்பட்டு அந்த இளைஞருக்கு வழிவிட தண்ணீர் பிடிப்பது போல் பாவனை செய்து கொண்டே நின்றிருந்தார். திடீரென அகிலாவின் கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை பறித்துக் கொண்டு சிட்டாய் பறந்துபோய் காரில் தப்பிச் சென்றார்.
கார் கண்டுபிடிப்பு
இதையடுத்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்ட கொள்ளையன் தப்பி ஓடிய காரை கருங்கல் பகுதியில் கண்டுபிடித்தனர். போலீசாரும் நேற்று என்ன தமிழ் சினிமா பார்த்தார்களோ? அசராமல் சினிமா பாணியிலேயே மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் என மாறி மாறி கொள்ளையனை துரத்தினர்
தப்பிய.கொள்ளையர்கள்
இந்த சேசிங் நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் கிளைமாக்ஸை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. அங்கு முகாமிட்டிருந்த கோட்டார் போலிசார் கொள்ளையன் பறந்த வாகனத்தை வழிமறித்தனர். அந்த வண்டியில் கொள்ளையனுடன் 5 இளைஞர்களும் இருந்தனர்.
சட்டனெ உஷாரான கொள்ளை கோஷ்டியின் ஓட்டுநர் எதிர்பட்ட தெருக்களுக்குள் காரை விரட்டினார். தோப்பு வணிகர் தெரு என்ற இடம் முட்டுச் சந்தாகிப் போனதால் காரை அங்கேயே நிறுத்திவிட்டு சுவர் ஏறிக் குதித்து மறுபடியும் எஸ்கேப் ஆகினர் கொள்ளையர்கள்...
"செமி கிளைமாக்ஸ்"
தொடர்ந்து நாகர்கோவில் நகரம் முழுவதும் சோதனையிடப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர சோதனையில் 2 கொள்ளையர்கள் பிடிபட்டனர். மற்ற இருவரை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications