தீக்குளிப்பேன் என்பது தான் பகுத்தறிவுள்ளவர் செய்யும் செயலா?: அமைச்சர் சிவபதி
சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லவே இல்லை என்று பள்ளிக் கல்வி, பொதுநூலகத் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைத் தலைவர் எம். ஆறுமுகம் (வால்பாறை) கூறுகையில், சங்கரன்கோவிலில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தை இடித்தால் தீக்குளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஒரு மூத்த தலைவர் இவ்வாறு பேசியிருப்பதால் அந்த நூலகத்தின் நிலை குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் என்.ஆர். சிவபதி கூறுகையில்,
அண்ணா நூற்றாண்டு நூலக்க கட்டிடம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து விவாதிக்க முடியாது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து சில விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன். 3 லட்சத்து 48 ஆயிரத்து 480 சதுர அடி (சுமார் 8 ஏக்கர்) பரப்பளவுள்ள இடத்தில் 41,700 சதுர அடியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட நூலகங்களின் நிதியில் இருந்து பெறப்பட்ட ரூ.148 கோடியை வைத்து இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ரூ.89 கோடி செலவில் புத்தகங்கள் வாங்கியுள்ளனர். அதில் வெறும் ரூ.55 லட்சத்திற்கு மட்டுமே தமிழ் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. ரூ.87 கோடிக்கு ஆங்கில புத்தகங்களை வாங்கியுள்ளனர். இந்த நூலகத்தால் பெரிய பலன் ஒன்றும் இல்லாததால் தான் அதை எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றி அறிவுசார் பூங்காவாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. நூலகத்தை இடமாற்றம் செய்யத் தான் தமிழக அரசு விரும்பியதே தவிர அதை இடிக்கப் போவதாக ஒருபோதும் அறிவிக்கவில்லை.
பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் வந்தவர் என்று கூறப்படும் கருணாநதி தீக்குளிப்பேன் என்று கூறியது பகுத்தறிவுக்கு உகந்ததுதானா என்பது யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications