ராமஜெயத்தைக் கொலை செய்தது தூத்துக்குடி குரூப்?

மேலும் ராமஜெயத்தின் 'கஸ்டடியில்' இருந்து வந்த இரு பெண்களின் பின்னணி குறித்தும் போலீஸார் தற்போது தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகப் பெரிய அரசியல் கொலையாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் ராமஜெயத்தின் கொலை வழக்குப் பார்க்கப்பட்டது. ஆனால் சாதாரண பெண் விவகாரத்தில் இந்தக் கொலை நடந்திருப்பதாக தற்போது சந்தேகம் வலுத்து வருகிறது.
கே.என்.நேருவின் தம்பியான ராமஜெயம்தான், நேருவின் பல பணிகளை முன்னின்று பார்த்து வந்தார். இதனால் நேருவின் அரசியல் எதிரிகள், ராமஜெயத்திற்கும் எதிரிகளாக இருந்து வந்தனர். எனவே நேருவின் அரசியல் எதிரிகளால் ராமஜெயம் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகம் இருந்து வந்தது.
பின்னர் இது ராமஜெயத்தால் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட்காரர்கள் ஒன்று சேர்ந்து கூலிப்படையினரை வைத்துக் கொலை செய்திருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அதுவும் பின்னர் மறைந்து தற்போது பெண் விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக புதிய தகவல் பரவ ஆரம்பித்துள்ளது.
ஏழு தனிப்படைகள் அமைத்தும் கூட இதுவரை ராமஜெயம் கொலை குறித்து உறுதியான தகவல், துப்பு எதுவும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், கொலைக்கு இதுதான் காரணமாக இருக்கலாம் என்று நம்புகிற அளவுக்கு சில சாதகமான விஷயங்கள் போலீஸ் வசம் சிக்கியிருப்பதாக கூறுகிறார்கள். அதை வைத்துக் கொண்டு உண்மையான குற்றவாளிகளை நோக்கி போலீஸார் மெதுவாக நகர ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
ராமஜெயம் கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர், திருச்சியைச் சேர்ந்த இன்னொரு சமூகப் பெண்ணைக் காதலித்து வந்தார். இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பவே அவர் திருச்சிக்கு வந்தார். ராமஜெயத்தின் உதவியை நாடினார்.
அப்போது திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ராமஜெயம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த ஜோடியைக் காத்ததோடு கல்யாணத்தையும் நடத்தி வைத்துள்ளார். மேலும் தனது பகுதியிலேயே குடியிருக்கவும் வைத்துள்ளார்.
இந்த நிலையில் காதல் மணம் புரிந்த தம்பதிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மறுபடியும் ராமஜெயத்தை நாடியுள்ளனர். இந்தப் பஞ்சாயத்தின் இறுதியில், அந்த நபர் சொந்த ஊருக்குப் போய் விட்டார். ஆனால் அவர் காதலித்து மணம் புரிந்த பெண் போகவில்லை. மாறாக அதே வீட்டிலேயே இருந்துள்ளார். ராமஜெயத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் அவர் போய் விட்டதாக கூறப்படுகிறது.
காதலித்த மனைவியும் போய், கடைசியில் தான் யாரிடம் உதவி நாடிப் போனோமோ அவரே தனது மனைவியை கஸ்டடிக்குக் கொண்டு போய் விட்டாரே என்ற ஆத்திரத்தில் அந்த தூத்துக்குடி நபர் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு உள்ளதாம். இந்த நபருக்குப் பின்னணியில் தூத்துக்குடி அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய தரப்பு ஆதரவாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. எனவே அந்தக் கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தற்போது சம்பந்தப்பட்ட பெண்ணையும் காணவில்லையாம். அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை என்கிறார்கள். அவரைக் கண்டுபிடிக்கவும் போலீஸார் முயன்று வருகின்றனர்.
இதேபோல நர்ஸ் ஒருவரும் கூட ராமஜெயத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தாராம். இவரும் காதல் கல்யாணம் செய்தவர், கணவரை விட்டுப் பிரிந்தவர். இவர் தற்போதும் வழக்கம் போல இருந்து வருகிறார். இருந்தாலும் இவர் மீதும் போலீஸ் பார்வை படிந்துள்ளதாம்.
இவர்தான் குற்றவாளி என்று ஆணித்தரமாக சொல்லும் அளவுக்கு ஆதாரம் சிக்கியவுடன் குற்றவாளிகளை போலீஸார் அமுக்கிப் பிடிக்கக் காத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இதுவரை அப்படி எந்த ஆதாரமும் போலீஸ் வசம் சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications