வார இறுதியில் ஊட்டி, கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலா செல்ல வேண்டுமா?
சென்னை: வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்களை ஊட்டி, கொடைக்கானல், பெங்களூரு, மைசூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் இன்ப சுற்றுலாவுக்கு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் கோடை வாசஸ்தலங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஆண்டுதோறும் இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து வருகின்றது. அதே போல இந்த ஆண்டும் இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி ஏப்ரல் முதல் வாரம் முதல் ஜூன் மாதம் வரை சுற்றுலா அழைத்து செல்லப்படும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே உள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தில் இருந்து பேருந்து புறப்படும்.
வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை சென்னை திரும்பும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி செல்ல ரூ. 2,500ம், கொடைக்கானல் செல்ல ரூ. 2500ம், ஏற்காடு, ஒகனேக்கல் செல்ல ரூ. 2,200 ம், மைசூர், பெங்களூருக்கு ரூ. 2,350ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலா செல்ல விரும்புவோர் 044- 25383333, 25384444 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ, www.ttdconline.com என்ற இணையதளத்திலோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் விவரம் அறிய 9176 995830 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.











Click it and Unblock the Notifications