மே 5ம் தேதி திண்டுக்கல்லில் வணிகர் தின மாநாடு: 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்பு
மதுரை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே மாதம் 5ம் தேதி 29வது வணிகர் தின மாநாடு திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரம ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5ம் தேதி 29வது வணிகர் தின மாநாடு திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு கடந்த 3ம் தேதி மாநாடு கால்கோள் விழா நடந்தது.
மே 5ம் தேதி காலை 8.45 மணிக்கு மாநாடு தொடங்கி மாலை வரை நடைபெறும். இந்த மாநாட்டில் அகில இந்திய வணிகர் சம்மேளன தலைவர் பி.சி.பார்டியா, ஒருங்கிணைப்பாளர் மகேந்திரஷா, பொதுச் செயலாளர் பிரவீன் கன்டேல்வால் மற்றும் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வணிக தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மே 5ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாநாட்டில் 5 லட்சம் வணிகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை வராமல் தடுத்திட, உணவுத் தொழில்களை பாதுகாக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தை ரத்து செய்ய, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அமலாக்கத்தை தடுத்து நிறுத்திட பல்வேறு முக்கிய தீர்மானஙகள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.