சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காதது பற்றி கவலை இல்லை: பண்ருட்டி ராமச்சந்திரன்

மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:
வீடுகளில் இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் வரை மின்சாரத்தை உபயோகிப்பவர்களுக்கு மின் கட்டணம் உயர்வு கூடாது. அவர்களால் மின் கட்டண உயர்வை தாங்கிக்கொள்ள முடியாது. இதனால் வீடுகளில் 200 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துபவர்களின் மின் கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும்.
வாடகைதாரர்களுக்கு சப்மீட்டர்
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வரை கொடுக்கவேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்கள் கூறுகிறார்கள். ஒரு யூனிட்டுக்கு ரூ.8 என்றால் 100 யூனிட்டுக்கு ரூ.800 வரை வீட்டு உரிமையாளருக்கு கொடுக்கவேண்டும். இது என்ன நியாயம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மின்சார வாரியம் ஒரு துணை மீட்டர் வைத்து மின்சாரம் வழங்கவேண்டும்.
போக்குவரத்து கழகத்திற்கோ, மின்சார வாரியத்திற்கோ, பால் நிறுவனத்திற்கோ நஷ்டம் என்று கூறி அதை மக்கள் தலையில் கட்டினால் ஏழைகளால் தாங்கமுடியுமா? கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்துவது நல்லது அல்ல.
மக்கள் எங்கு எல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவும், போராடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம். சட்டசபையில் பேச விடாதது பற்றி கவலை இல்லை. மக்கள் பிரச்சினை என்று வரும்போது எந்த தியாகமும் செய்ய நாம் தயாராக இருக்கிறோம்.
ஏமாற்றும் வேலை...
தே.மு.தி.க. கூட்டணியால் ஆட்சிக்கு வரவில்லை என்று அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள். கடந்த தேர்தலில் நம்முடன் கூட்டணியில் இல்லாத போது ஏன் தோல்வி அடைந்தார்கள் என்று அவர்கள்தான் சொல்லவேண்டும். நாம் இல்லாமல் ஆட்சிக்கு வந்துவிட்டதாக கூறுவது நாட்டை ஏமாற்றும் வேலை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications