பாகிஸ்தானுக்கு சம்மட்டி அடி.. PoKல் நடந்த பெரிய சம்பவம்.. கையை பிசையும் ஷெரீப் அரசு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தில் பேசிய தலைவர் ஒருவர், பாகிஸ்தான் ராணுவத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். கடந்த காலங்களில் பாகிஸ்தான் ராணுவமே காஷ்மீரிகளிடம் ஆயுதங்களை வழங்கியதாகக் கூறியுள்ள அவர், தற்போது உரிமைகளுக்காக போராடும் மக்களை தீவிரவாதிகள் என்று பாகிஸ்தான் அரசு முத்திரை குத்துவதாக சாடியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் 24வது நாளை எட்டியுள்ளது.

காஷ்மீர் போராட்டம்
போராட்டத்தின் ஒரு பகுதியாக ராவலகோட் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் உரையாற்றிய ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி தலைவர் சர்தார் அமன் கான், பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பண்டித்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியதை வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். அவர் மேலும் பேசுகையில், "காஷ்மீரிகள் தங்கள் கைகளில் துப்பாக்கிகளை வைத்திருந்ததற்குப் பாகிஸ்தான் ராணுவமே முழு காரணம், அவர்கள்தான் துப்பாக்கிகளை வழங்கினார்கள்.
தீவிரவாத இயக்கம்
ஆனால், இன்று அதே பாகிஸ்தான் அரசு எங்களை தீவிரவாதிகள் என்று அழைக்கிறது. அவர்களுக்கு என்ன தைரியம் இருந்தால் நம்மை தீவிரவாதிகள் என்று அழைக்கிறார்கள். சொல்லப்போனால் இங்குள்ள உள்ளூர் நிர்வாகத்திற்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே தான் தொடர்பு இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராவலகோட்டில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய நிகழ்ச்சியை உள்ளூர் அதிகாரிகள் ஆதரித்து வழிநடத்தினர்.. ராவலகோட்டின் துணை ஆணையர் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதோடு, ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தார்" என்றார்.
எச்சரிக்கை
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடக்கும் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் தங்களின் 38 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு இதனைச் செய்யத் தவறினால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தை நோக்கிப் பிரம்மாண்டப் பேரணி நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பேரணி நடைபெற்றால்.. தங்களின் தற்போதைய கோரிக்கைகளைத் தாண்டி, பாகிஸ்தான் தங்கள் பகுதியில் முற்றிலும் வெளியேற வேண்டும் என்ற பெரிய கோரிக்கையை அவர்கள் முன்வைக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் மக்கள் கூடுதல் உரிமைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களைக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். அண்மைக் காலத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது..
போராட்டம்
தொடக்கத்தில் மின் கட்டண உயர்வு, கோதுமைக்கான மானியம் ரத்து செய்யப்பட்டது மற்றும் வரலாறு காணாத விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராகத் தொடங்கிய இந்த போராட்டம், தற்போது அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. அரசு முறையான நடவடிக்கையை எடுக்க தவறியதே நிலைமையை மோசமாக்கி இருப்பதாக மக்கள் சாடுகிறார்கள். ராவலகோட் மற்றும் முசாஃபராபாத் போன்ற நகரங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் பலர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications