சிம்பு எப்படிப்பட்டவர் தெரியுமா? உண்மையான கேரக்டர் இதுதான்! ஓபனாக பேசிய பெப்சி உமா
சென்னை: ஒரு காலத்தில் தொலைக்காட்சியை ஆட்சி செய்த தொகுப்பாளர்களில் முதல் வரிசையில் இருந்தவர் பெப்ஸி உமா. 90ஸ் கிட்ஸின் கிரஷ் என்றே ரசிகர்கள் கொண்டாடிய அவர், பல ஆண்டுகளாக மீடியாவை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
"இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அதே புன்னகை, அதே அழகு" என்று ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்போது அவர் சிம்பு பற்றி பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சிம்புவின் ஆரம்ப காலம்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் சிலம்பரசன். சினிமா வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள், சர்ச்சைகள், தோல்விகள் என எவ்வளவோ கட்டங்களை கடந்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் அதிலிருந்து மீண்டு வந்து தன்னை நிரூபித்தவர்.
ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்தது, பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது, தொடர்ந்து விமர்சனங்கள் வந்தது என சிம்புவின் சினிமா வாழ்க்கை பின்னோக்கி சென்றது. ஆனால் அதையெல்லாம் அமைதியாக எதிர்கொண்ட அவர், கடுமையான உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார். அதன் பிறகு வெளியான 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதன் மூலம், "STR is back" என்று ரசிகர்கள் மீண்டும் கொண்டாட ஆரம்பித்தனர்.
சிம்புவின் புதிய படம்
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' படத்தில் சிம்பு நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்புதான் ஒரு முக்கிய ஷெட்யூல் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படங்களிலும் அவர் நடிக்கவிருக்கிறார். அடுத்தடுத்து பெரிய படங்கள் கைவசம் இருப்பதால், சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்த சூழலில்தான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெப்ஸி உமாவிடம், சிம்புவின் புகைப்படத்தை காட்டி அவரைப் பற்றி கேட்கப்பட்டது.

சிம்பு பற்றி பெப்சி உமா பேச்சு
அதற்கு அவர் சிரித்தபடியே, "சினிமாவில் நான் பார்த்தவர்களில் சில பேருக்கு மட்டும்தான் தலைக்கனம் இருக்காது. அந்த பட்டியலில் சிம்புவும் ஒருவர். இவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தும் ரொம்ப அடக்கமாக இருப்பார். கர்வம் தலையில் ஏறாத மனிதர். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்" என்று மனம் திறந்து பேசினார்.
பெப்ஸி உமாவின் இந்த வார்த்தைகள்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிம்புவைப் பற்றி இதற்கு முன்பும் பல இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட, "வெளியில் பலர் நினைப்பது போல இல்லை. நெருக்கமாக பழகினால் ரொம்ப அன்பாக இருப்பார்" என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது அந்த பட்டியலில் பெப்ஸி உமாவும் இணைந்திருக்கிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்து வரும் ரசிகர்கள், "சிம்புவை பற்றி நெருக்கமாக பழகியவர்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான் பேசுறாங்க. வெளியில் அவரைப் பற்றி எவ்வளவு விமர்சனம் வந்தாலும், அவரோட குணத்தை யாராலும் குறை சொல்ல முடியல" என்று பதிவிட்டு வருகிறார்கள்.
மற்றொரு பக்கம், பெப்ஸி உமாவைப் பற்றியும் ரசிகர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். "ஒரு காலத்தில் பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சிக்காக டிவி முன் காத்திருந்தோம். ரஜினிகாந்த், ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தும், தனக்கு நடிப்பில் விருப்பம் இல்லை என்று மறுத்தவர். இப்போதும் அதே எளிமையோடு பேசுகிறார்" என்று 90ஸ் கிட்ஸ் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications