ஸ்டாலின் முன்பு தாத்தா சுப.தங்கவேலன், பேரன் ரித்தீஷ் கோஷ்டிகள் கட்டிப்புரண்டு சண்டை!

வழக்கமாக ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகள்தான் மோதலில் இறங்குவார்கள். இப்போது ஒரு மாற்றமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் தாத்தா சுப. தங்கவேலன் மற்றும் அவரது பேரன் ரித்தீஷ் குமார் கோஷ்டிகள், ஸ்டாலின் கண் முன்பாகவே கடும் சண்டை போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப. தங்கவேலன் பார்த்து ஆளாக்கி விட்டவர்தான் ரித்தீஷ் குமார். எடுத்த எடுப்பிலேயே மேலிடத்தில் நல்ல அறிமுகம் பெற்றதாலும், காசை இறக்கி விடுவதில் சற்றும் சளைக்காதவராக இருந்ததாலும் ரித்தீஷ்குமாருக்கு ராமநாதபுரம் எம்.பி. தொகுதியை திமுக மேலிடம் கொடுத்தது. அவரும் ஜெயித்து எம்.பியாகி விட்டார்.
அதன் பின்னர் அவர் தாத்தாவுக்கே ஆப்பு வைக்க ஆரம்பித்தார். தாத்தாவின் பேச்சை கண்டு கொள்ளாமல் தன் போக்குக்குப் போக ஆரம்பித்தார். இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடிக்க ஆரம்பித்தது.
இதில் சுப. தங்கவேலன் கோஷ்டியைச் சேர்ந்த திமுக செயலாளர் ஒருவரை ரித்தீஷ் குமார் ஆள் வைத்துக் கடத்திய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கடத்தில் ஈடுபட்ட கும்பலில் இடம் பெற்றிருந்த கேரள ரவுடியைத்தான் சமீபதில் திண்டுக்கலில் வைத்து போலீஸார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரபல மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம்தான் போலீஸாரிடம் ரித்தீஷ் குமார் குறித்துப் போட்டுக் கொடுத்தார்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கான திமுக இளைஞர் அணி நேர்காணல் நடைபெற்றது. மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த நேர்காணலில் சுப. தங்கவேலன் ஆதரவாளர்கள் மற்றும் ரித்தீஷ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது, தங்கவேலன் ஆதரவாளர் கார்மேகம் தலைமையிலான குழுவுக்கும், ரித்தீஷின் ஆதரவாளர் நல்ல சேதுபதி கும்பலுக்கும் இடையே பதவி தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இது பெரும் அடிதடியாக மாறி கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். சட்டைகள் கிழிந்தன, கும்மாங் குத்துக்கள் சரமாரியாக விழுந்தன.
இதில் தங்கவேலன் தரப்பைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் முத்துராமலிங்கம் படுகாயமடைந்து விழுந்தார். உடனே அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
ஸ்டாலினை வைத்துக் கொண்டே தங்கவேலன், ரித்தீஷ் கோஷ்டியினர் சண்டை போட்டுக் கொண்டது திமுக வட்டாரத்தில் சலசலப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ரித்தீஷ் ஆதரவாளர்கள் மீதும், ரித்தீஷ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கவேலன் தரப்பினர் திமுக மேலிடத்தை வலியுறுத்தியுள்ளனராம். ரித்தீஷ் குமார் மு.க.அழகிரி கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications