காதலில் 'மோசடி'.. சென்னை ஐ.ஐ.டி யில் உ.பி மாணவர் தற்கொலை!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் குல்தீப்யாதவ் (வயது 19). இவரது தந்தை பெயர் ரோகித்சிங். விவசாய பண்ணை வைத்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் சிவில் என்ஜினீயரிங் 2-வது ஆண்டு படித்து வந்த இவர், ஐ.ஐ.டி.வளாகத்தில் உள்ள நர்மதா மாணவர்கள் விடுதியில் அறை எண் 311-ல் தங்கி படித்து வந்தார். நன்றாக படிக்கும் மாணவரான குல்தீப் ஞாயிறுக்கிழமை அன்று தான் தங்கி இருந்த அறைக்குள்ளேயே தூக்குபோட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
மாணவர்கள் காப்பாற்ற முயற்சி
குல்தீப் தூக்கில் தொங்குவதை பக்கத்து அறையைச் சேர்ந்த பார்த்து விட்டனர். உடனடியாக கதவை உடைத்து அறைக்குள் புகுந்தனர். தூக்கில் தொங்கிய மாணவர் குல்தீப்பை கீழே இறக்கினார்கள். அப்போது அவருக்கு உயிர் இருந்தது. அவரை உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அவர் உயிர் பிழைத்துக் கொண்டார் என்று தான் முதலில் சொல்லப்பட்டது. ஆனால் மாலை 4 மணி அளவில் அவர் இறந்து போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாணவர் குல்தீப்பின் உடல் அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குல்தீப் இறந்த தகவலை உடனடியாக ஆக்ராவில் வசிக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கு மாணவர்கள் தெரிவித்தனர்.
உயிரை மாய்த்த காதல்
குல்தீப் தற்கொலைக்கு காதல் பிரச்சினையே காரணமாக கூறப்படுகிறது. மாணவரின் அறையில் போலீசார் சோதனை போட்டபோது, டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. தன்னோடு படிக்கும் மாணவி ஒருவரை குல்தீப் உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். ஆனால் அந்த மாணவியும் குல்தீப்பை காதலித்துள்ளார். அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் காதலித்து மோசடி செய்து விட்டதாக தெரிகிறது. இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மூன்று முறை பேசினார்
குல்தீப் உயிரை விடுவதற்கு முன்பு தனது காதலியோடு 3 முறை செல்போனில் பேசி இருக்கிறார். முதலில் காலை 8.57 மணிக்கு குல்தீப்புடன் அவரது காதலி பேசி இருக்கிறார். அடுத்து 9.27-க்கு ஒரு முறை கூப்பிட்டு பேசி இருக்கிறார். இறுதியாக 9.42 மணிக்கு என்னோடு பேசு என்று செல்போனில் எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பி உள்ளார். குல்தீப்பும் உடனடியாக பேசி உள்ளார். அதன்பிறகுதான் அறையில் தூக்கில் தொங்கி உள்ளார். இந்த செல்போன் பேச்சுகள்தான், குல்தீப்பின் இறுதி அத்தியாயத்தை எழுதி இருக்கிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications