தினமும் டிராபிக் ஜாம்னா எப்படி வேலைக்குப் போறது? : புலம்பும் சென்னைவாசிகள்

மெட்ரோ ரயில்
சென்னை நகரில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது. இதற்காக மெட்ரோ மற்றும் மோனோ ரயில்ட் திட்டங்கள் சென்னை நகரில் அமைக்கப்பட உள்ளன.
சென்னை சென்டிரலில் இருந்து பரங்கிமலை வரையும், வண்ணாரபேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படுகிறது. வடபழனி, அண்ணா சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக, பல சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன.
இதனால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த சாலைகளில் காலை மற்றும் மாலை நேரத்தில் வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்து செல்லும் நிலை நீடித்தே வருகிறது.
லாரிகளுக்கு அனுமதி?
இந்நிலையில் பகல் நேரத்திலேயே சென்னைக்குள் லாரிகள் உலா வருகின்றன. சென்னையில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே சரக்கு லாரிகள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் சரக்குகளை இறக்கிவிட்டு, காலை 7 மணிக்குள் நகர் பகுதிக்குள் இருந்து லாரிகள் வெளியேறிவிட வேண்டும்.
அதேநேரத்தில், சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வரும் கண்டெய்னர் லாரிகளும், கோயம்பேட்டில் இருந்து மாதவரம், மணலி, எர்ணாவூர், திருவொற்றிïர் வழியாக சுற்றிக் கொண்டு செல்ல 24 மணி நேரமும் அனுமதிக்கப்படுகிறது.
இருப்பினும் வடசென்னையில் மாதவரம், மூலக்கடை வழியாக லாரிகள் பகல் நேரத்திலேயே நுழைந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த லாரிகளின் வருகையும் போக்குவரத்து நெரிசலுக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகின்றது.
போலீசார் மீது புகார்
பொதுவாக, விதிமுறைகளை மீறி நகருக்குள் நுழையும் சரக்கு லாரிகள், மினி வேன்களுக்கு ரூ.100 முதல் ரூ.2500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், கணக்கு காட்டுவதற்காக சில வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார் பல வாகன ஓட்டுனர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, லாரியை நகர் பகுதிக்குள் அனுமதித்துவிடுகின்றனர். லாரி ஓட்டுநர்களும் சிக்னலுக்கு சிக்னல் பணம் கொடுத்துக் கொண்டே முன்னேறிச் சென்று, தாங்கள் செல்லும் இடத்தை அடைந்து விடுகின்றனர்.
ஷேர் ஆட்டோக்கள்
போக்குவரத்து நெரிசலில் ஷேர் ஆட்டோக்களின் பங்களிப்பும் அதிகம். 3 பேருக்கு மேல் ஏற்றிவரும் ஷேர் ஆட்டோக்களை போலீசார் வழிமறித்து அபராதம் வசூலிக்கின்றனர். ஆனால் சில ஆட்டோ ஓட்டுநர்கள், அடிக்கடி பணம் கொடுப்பதை தவிர்க்க, காலை நேரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும்போதே, போலீசாரிடம் அபராதத் தொகை என ரூ.100 கட்டிவிட்டு ரசீது வாங்கிக்கொள்கின்றனர்.
இந்த ரசீதை வைத்துக் கொண்டே, அன்றைய நாள் முழுவதும் அதிக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். ஆட்டோவை போலீசார் மறித்தால் ஏற்கனவே கையில் வைத்திருக்கும் ரசீதை காட்டி பயணத்தை தொடர்கின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் நீடிக்கும் இடங்களில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், பகல் நேரத்தில் நகருக்குள் லாரிகள் நுழைய காரணமாகும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை












Click it and Unblock the Notifications