தமிழர்களை வாட விட்ட அச்சுதானந்தனை வரவேற்கும் உதயக்குமாருக்கு பாமக 'பொளேர்' கேள்வி!

இதுகுறித்து பாமக துணை பொதுச் செயலாளர் வியனரசு நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கிடைக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாழ்பட்டுக் கிடப்பதற்கு கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனின் நடவடிக்கையே காரணம். அதோடு இன்றைக்கு முல்லைப்பெரியாறு அணை இழப்புகளையும்,பாதிப்புகளையும் சந்திக்க அச்சுதானந்தனின் குறுகிய மனப்பான்மையும், மனித நேயமற்ற போக்கும் தான் காரணம்.
தமிழர்கள் என்றால் வேப்பங்காயாகவே கசக்கும் மன எண்ணம் உள்ள அச்சுதானந்தன் ஆடு நனைகிறதே என்று ஒணான் அழுத கதையாக இன்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களைப் பார்க்க வருவது தமிழர்கள் ஏற்கத்தக்கதல்ல.
அணு உலைக்கெதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் அண்மைக்கால செயல்பாடுகளும்,அவர் வெளியிடும் கருத்துக்களும் உண்மையான எதிர்ப்பாளார்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்திற்குள் அச்சுதானந்தனை அனுமதிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.
இலங்கையின் சுற்றுச்சூழல் நீதிக்கான நடுவத்தின் இயக்குனர் கேமந்த விதநாயக்கே, கூடங்குளம் அணு உலையை இலங்கை அரசு எதிர்க்க வேண்டுமென ராஜபக்சேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்று நாளைக்கே ராஜபக்சே இடிந்தகரை வந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தருகிறோம் என்றால் உதயகுமார், புஷ்பராயன்,ஏற்றுக் கொள்வார்களா. தமிழகம் தான் அனுமதிக்குமா? எனவே அச்சுதானந்தன் வருகையை பா.ம.க. கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications