Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுக்கோட்டை: முத்துக்குமரன் மறைந்த சோகம் போவதற்குள் தேர்தல் களத்தில் குதித்த அதிமுக!

Subscribe to Oneindia Tamil

Muthukumaran
புதுக்கோட்டை: திருச்சி மேற்கு, சங்கரன்கோவில் என்று இரண்டு இடைத் தேர்தல்களை அதிகாரபலம் உள்ளிட்ட பல்வேறு பலங்களால் வென்ற தெம்பில் இருக்கும் அதிமுக, புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ முத்துக்குமரன் மறைந்த சோகமும், வடுவும் மறைவதற்குள்ளாகவே இடைத் தேர்தல் குறித்து பேச ஆரம்பித்திருப்பது அப்பகுதி மக்களிடையே ஒருவித வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்கோட்டை தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துக்குமரன் போட்டியிட்டு நல்லதொரு வெற்றியைப் பெற்றார்.

வெற்றி பெற்றதோடு மக்களை மறப்பதுதான் மக்கள் பிரதிநிதிகள் எனப்படும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோரின் வழக்கம். பெரிய பெரிய தலைவர்கள் முதல் சாதாரண எம்.எல்.ஏக்கள் வரை இதைத்தான் காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் முத்துக்குமரன் வேறு மாதிரி இருந்தார்.

தொகுதி மக்களுக்காகவே உழைத்து வந்தார். தொகுதி மக்களின் உணர்வறிந்து, குறிப்பறிந்து, பிரச்சினை புரிந்து அதை எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு சென்று நிவர்த்தி தேட முயன்று வந்தார்.

சட்டசபையில் அவர் பேசத் தொடங்கினால் நிறுத்த மாட்டார். ஆனால் யாரையும் புகழ்ந்து பாடி, போற்றி பாடி, புராணம் பாடி, கதை சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை அவர். தனது தொகுதி மக்களின் பிரச்சினைகளை மட்டுமே பேசுவார். தனக்குத் தேவையான பதில் கிடைக்கும் வரை அமைச்சர்களை விட மாட்டார். குரல் உயர்த்திப் பேச மாட்டார். கணிவான குரலில் பணிவாக தனது கோரிக்கைகளை வைப்பார். அதற்காக அவரை ஏதாவது பதில் சொல்லி சமாதானப்படுத்தி விடலாம் என்று எந்த மந்திரியாவது நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். தான் எதிர்பார்த்த பதிலைப் பெறும வரை அந்த மந்திரியை விட மாட்டார். இது முத்துக்குமரன் குறித்து சக எம்.எல்.ஏக்கள் சொன்னது.

அப்படிப்பட்ட ஒரு அருமையான மக்கள் பிரதிநிதியை இழந்துள்ளனர் புதுக்கோட்டை மக்கள். இது நிச்சயம் புதுக்கோட்டை மக்களுக்கு மிகப் பெரிய இழப்பு. காரணம், தங்களுக்காக உண்மையிலேயே பாடுபட்டு வந்த ஒரு மனிதனை, மிக மிகச் சாதாரணமான ஒரு மனிதனை இழந்து நிற்கிறார்கள் அவர்கள்.

இந்த சோகத்திலிருந்தே இன்னும் அவர்கள் மீளாத நிலையில், அடுத்து இங்கு இடைத் தேர்தல் வரப் போகிறது, அதையும் சங்கரன்கோவிலைப் போலவே நாம் தனியாக போட்டியிட்டு வெல்வோம் என்று அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பது அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. முகம் சுளிக்க வைப்பதாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பே வெளியாகாத நிலையில், இப்படி அதிமுக அமைச்சர் வந்து பேசியிருப்பது புதுக்கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனது கூட்டணிக் கட்சி ஒன்று போட்டியிட்ட தொகுதியில் தானே போட்டியிடப் போவதாகவும், அதை சங்கரன்கோவிலைப் போல வெல்லப் போவதாகவும் அதிமுக கூறியிருப்பதுதான் அனைவரையும் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

சங்கரன்கோவிலில் அதிமுக எப்படி வெற்றி பெற்றது என்பது அதிமுகவினருக்கும், சங்கரன்கோவில் தொகுதி மக்களுக்கும்தான் நன்றாகத் தெரியும். எனவே அதே போல இங்கும் வெல்வோம் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியிருப்பதைப் பார்த்தால் புதுக்கோட்டையில் விரைவில் அமைச்சர்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இழவு வீட்டுக்குள் உளவு பார்க்க வந்தது போல அமைந்துள்ளது ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு.

சங்கரன்கோவிலில் தன்னைத் தவிர அத்தனை அமைச்சர்களையும் கொண்டு போய்க் குவித்து, அதிகார பலத்தை முழுமையாக பயன்படுத்தி அதிமுகவுக்கு வெற்றித் தேடித் தந்தார் முதல்வர் ஜெயலலிதா. எனவே புதுக்கோட்டையிலும் அதேபோல அவர் முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் இந்த முடிவு குறித்து ஜெயலலிதாவை எதிர்ப்பதை கனவில் கூட விரும்பாதவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதும் தெரியவில்லை. சங்கரன்கோவிலில் போட்டியிடுவது வேஸ்ட் என்று கூறியவர் அவர். எனவே புதுக்கோட்டையில் போட்டியிடுவது போர் என்று கூறினாலும் கூறலாம்.

சங்கரன்கோவிலில் திமுக, தேமுதிக, மதிமுக என அத்தனைக் கட்சிகளும் தனித் தனியாக நின்று போட்டியிட்டதால், அனைவருமே படு தோல்வியைச் சந்தித்ததோடு, டெபாசிட்டையும் பறி கொடுத்தனர். புதுக்கோட்டையிலும் அப்படியே போட்டியிடுவார்களா அல்லது கூட்டாக சேர்ந்து அதிமுகவுக்கு சவால் விடுவார்களா என்பது தெரியவில்லை.

எப்படியோ, புதுக்கோட்டையில் விரைவில் இடைத் தேர்தல் களை கட்டும் என்பது மட்டும் நிச்சயம். விரைவில் சைரன் கார்கள் சரமாரியாக உலா வரும், அமைச்சர்கள் அடிக்கடி வருவார்கள், அரசின் இலவசத் திட்டங்கள் இங்கு இனி வீறு கொண்டு எழும். புதுக்கோட்டை குறித்து இன்னும் சில காலத்துக்கு அரசு வட்டாரத்தில் அடிக்கடி அக்கறையுடன் பேசப்படும் என்பதில் மட்டுமே சந்தேகமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+