சம்மருக்குள் ஏர் இந்தியா மூடப்பட்டுவிடும்: துபாயில் கிண்டலடித்த வயலார் ரவி!
துபாய்: துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மையத்தின் (Indian Community Welfare Committee) கூட்டம் 03.04.2012 அன்று மாலை இந்திய கன்சுலேட் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்திய சமூக நல மைய கன்வீனர் கே. குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சமூக நல முன்னேற்ற (Community Development Authority) அத்தாரிட்டியின் அலுவலர் பழனி பாபு மலர்ச்செண்டு வழங்கி மத்திய அமைச்சர் வயலார் ரவியை வரவேற்றார்.
ஏற்புரை நிகழ்த்திய மத்திய அமைச்சர் வயலார் ரவி அமீரக அரசுடன் மேற்கொண்டு வரும் பல்வேறு ஒப்பந்தங்கள், துபாயில் பிரவாஸி பாரதிய திவாஸ் கொண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து விவரித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இந்திய சங்கங்களின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
துபாய் தமிழ்ச் சங்க பொருளாளர் கீதா கிருஷ்ணன், அமீரகத்தில் பணியினை முடித்து தாயகம் திரும்புவர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரியில் சேர்ப்பதற்கு ஏற்படும் சிரமங்களை விவரித்ததுடன் இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க அமைச்சர் உதவிட கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு இந்திய சங்க பிரதிநிதிகளும் கோடை விடுமுறையில் தாயகம் செல்லும்போது விமானக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்படுவதை சுட்டிக்காட்டி குறைந்த பட்சம் ஏர் இந்தியா விமானத்திலாவது கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அது மிகவும் கடினம். எனினும் முயற்சிப்பதாக தெரிவித்தார். திடீரென அனைவரும் எதிர்பார்க்காத வகையில் நகைச்சுவையாக அதற்குள் ஏர் இந்தியா மூடப்பட்டுவிடும் என்றதும் சிரிப்பொலி அடங்க வெகு நேரமானது.
கன்சல் காகா நன்றி கூறினார். கன்சுல் சிங், அசோக் பாபு உள்ளிட்ட துணைத்தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஈமான், துபாய் தமிழ்ச் சங்கம், துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கம், கேரளா முஸ்லிம் கலாச்சார மையம் உள்ளிட்ட 85 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications