மாவோயிஸ்ட் தலைவரின் மனைவி சுபஸ்ரீ நிரபராதி-ஒடிசா நீதிமன்றம்
குனுபூர்: இத்தாலியரை கடத்தி வைத்துள்ள மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைப்படி முத்த மாவோயிஸ்ட் தலைவர் சபயசாசி பாண்டாவின் மனைவி சுபஸ்ரீயை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
2003-ம் ஆண்டு குடாரி காவல்நிலையம் மீதான தாக்குதல் வழக்கில் பாண்டாவின் மனைவி சுபஸ்ரீ கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில் சுபஸ்ரீ உட்பட 7 பேரை விடுதலை செய்வதற்காக இத்தாலியர் இருவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.
இருவரில் ஒருவரை மட்டும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்த மாவோயிஸ்டுகள் தங்களது பிரதிநிதிகள் மூலம் ஒடிசா மாநில அரசாங்கத்துடன் பேச்சுகளை நடத்தி வந்தனர்.
சுபஸ்ரீ உள்ளிட்டோரின் விடுதலையில் மாவோயிஸ்டுகள் உறுதியாக இருந்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் இடையில் தொய்வு ஏற்பட்டது. மேலும் மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய மாநில போலீசார் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சுபஸ்ரீ மீதான வழக்கை விசாரித்த குனுபூர் விரைவு நீதிமன்றம் அவரை இன்று விடுதலை செய்வதாக அறிவித்தது. இதனால் எந்த நேரத்திலும் பிணைக் கைதியாக உள்ள இத்தாலியர் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதனிடையே கடத்தப்பட்ட எம்.எல்.ஏவை விடுக்க மாவோயிஸ்டுகள் கோரியிருந்தபடி 30 உறுப்பினர்களை விடுதலை செய்ய மாநில அரசு ஒப்புக் கொண்டது. மேலும் மாவோயிஸ்டுகள் விடுத்திருந்த கெடுவும் இன்றுடன் முடிவடைவதால் எம்.எல்.ஏவும் விடுக்கப்படக் கூடும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications