மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.வரதராஜன் மரணம்

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பிய வரதராஜனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு ஜெகதாம்பாள் என்ற மனைவியும், கல்யாணசுந்தரம், பாரதி ஆகிய மகன்களும் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் பாளையம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சொந்த ஊராகக் கொண்ட இவர் திண்டுக்கல்லில் உள்ள செளந்தராஜா மில்லில் தொழிலாளியாக பணியாற்றினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார் இவர், அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உயர்ந்தார். 1967ம் ஆண்டு வேடசந்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 50 வருட அரசியல் வாழ்வில் இருந்த வரதராஜனுக்கு சொந்தமாக சென்னையில் வீடு கூட கிடையாது. அவரது உடல் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
என்.வரதராஜன் உடல் இன்று மாலை திண்டுக்கல் கொண்டு செல்லப்படுகிறது. நாளை மாலை உடல் தகனம் நடக்கிறது.
3 நாட்களுக்கு கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும்:
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்தியக் குழு உறுப்பினரும், தமிழ் மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளருமான தோழர் என்.வரதராஜன் இன்றுகாலை 11.30 மணியளவில் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடைய உடல் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 4.30 மணிக்கு அவர் உடல் திண்டுக்கல்லுக்கு எடுத்துச் செல்லப்படும். நாளை (11 4 2012) மாலை 03.00 மணிக்கு திண்டுக்கல்லில் அன்னாரது இறுதி நிகழ்ச்சி நடைபெறும்.
மறைந்த தோழர் என்.வரதராஜன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய செங்கொடி தாழ்த்தி தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. கட்சியினுடைய மாவட்டக் குழுக்களும், கிளைகளும் அனைத்து இடங்களிலும் காலஞ்சென்ற தோழருக்கு மரியாதை செலுத்தும் வகையில் 3 நாட்களுக்கு கட்சி கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications