நாட்டை முன்னேற்றும் செய்திகளுக்கு முக்கியத்துவம்: அப்துல் கலாம்

சென்னையில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் 13 ஆண்டு மாநில மாநாடு நடைபெற்றது. அதில் அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
உண்மையை வெளிக்கொண்டுவருவதில், உண்மைக்காக போராடுவதில், பத்திரிக்கையாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். நேர்மையும், உண்மையும் இருந்தால் பத்திரிக்கையாளர்கள் எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை.
நாட்டின் வளர்ச்சி
நாட்டின் வளர்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் பங்கு முக்கியமானது. நாட்டிற்கு வளர்ச்சி தரக்கூடிய செய்திகளை நாளிதழ்களின் முதல் பக்கத்தில் முக்கியத்துவம் அளித்து வெளியிடவேண்டும்.
மக்களுடன் நேரடி இணைப்பில் உள்ளவை பத்திரிக்கைகள். தினசரி காலையில் நாளிதழ்களில் நன்மை தரும் செய்திகளை முதன் முதலில் வெளியிடுவதன் மூலம் மக்களுக்கு நன்மை ஏற்படும். அதை விடுத்து தீமை தரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் மனப்போக்கை பத்திரிக்கைகள் மாற்றிக்கொள்ளவேண்டும்.
உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதைப் பற்றி முக்கியத்தும் கொடுக்கும் கட்டுரைகளை வெளியிடவேண்டும் என்று டாக்டர் அப்துல் கலாம் வலியுறுத்தினார்.
உயர்ந்த லட்சியத்துடன், எண்ணங்களுடன் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் “ஆகாயத்தின் உச்சியை அடையும் வரை பறந்து கொண்டே இருப்பேன்” என்ற கவிதையினை அவர் வாசித்தார்.
யானை நடந்தால் செய்தியல்ல, யானை விழுந்தால்தான் செய்தி என்ற சித்தாந்தத்தை மாற்றவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க மாநில மாநாட்டில் மாநிலத் தலைவர் ரவீந்திரதாஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மட்டுமல்லாது, புதுச்சேரி, புதுடெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications