நிலநடுக்கத்தால் அப்படியே 3 அடிக்கு பொங்கிய குளத்து நீர்: அலறி ஓடிய மக்கள்
குமரி: இந்தோனேசியாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் குமரி மாவடத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் 3 அடி வரை பொங்கி எழுந்துள்ளது.
இந்தோனேசியாவில் நேற்று 8.9 அளவுக்கு பயங்கர நிலநடு்ககம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள சில குளங்கள் பொங்கியுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
குமரி மாவட்டம் வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டுவிளையில் உள்ள பல குளங்களில் சிறுதாமரைக்குளமும் ஒன்று. நேற்று மதியம் அந்த குளத்தில் ஆண்களும், பெண்களும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குளத்தின் ஒரு பகுதியில் தண்ணீர் 3 அடிவரை அலை போல பொங்கிச் சிதறியுள்ளது. இதைப் பார்த்தவுடன் அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு குளத்தைவிட்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் குளம் எப்பொழுகும் போல அமைதியாக காணப்பட்டுள்ளது.
இதே போன்று தக்கலை அருகே உள்ள கேரளபுரம் அதிசய விநாயகர் மற்றும் மகாதேவர் கோவில் தெப்பக்குளம், உதயகிரி கோட்டை அருகே உள்ள தெப்பக்குளம், ஆழ்வார்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் ஆகியவற்றிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் தண்ணீர் பொங்கியுள்ளது. சிறிது நேரத்தில் குளங்கள் பழைய நிலைக்கு மாறின.
இது தவிர நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள கோவில் தெப்பகுளம், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள குளங்களிலும் தண்ணீர் பொங்கியுள்ளது.