சங்கரராமன் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக போலீசுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி: கொலை செய்யப்பட்ட காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனின் குடும்பத்துக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சில நாட்களுக்கு முன் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராயினர்.
நேற்று முன்தினம் முதல் வழக்கறிஞர்களின் வாதம் தொடங்கியது. அப்போது நீதிமன்றத்துக்கு வந்த சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த சர்மா ஆகியோர் தங்களுக்கு கொலை மிரட்டல் இருந்ததால் பயந்து போய் பிறழ் சாட்சியம் அளித்ததாகவும், எனவே மீண்டும் தங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி நீதிபதி முருகனிடம் மனு அளித்தனர்.
இந் நிலையில் நேற்று நடந்த விசாரணையின்போது இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 14 பேர் ஆஜராயினர். பின்னர் வழக்கு விசாரணையை 16ம் தேதிக்கு நீதிபதி முருகன் ஒத்தி வைத்தார்.
அதன் பிறகு சங்கரராமன் மனைவி பத்மா கொடுத்த மனுவை விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி. இதற்காக பத்மா, ஆனந்த சர்மா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்த மனு தொடர்பாக எதிர் தரப்பினர் பதில் அளிக்க கால அவகாசம் கேட்டுள்ளதால், விசாரணையை திங்கட்கிழமை நடத்துவதாக அறிவித்தார் நீதிபதி.
அப்போது நீதிபதியிடம், பத்மா மேலும் ஒரு மனுவை கொடுத்தார். அந்த மனுவில், 11.3.2009 அன்று எனது மகளின் கணவருக்கு டெலிபோனில் மிரட்டல் வந்தது. இது சம்பந்தமாக தமிழக போலீஸ் டி.ஜி.பியிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து அவர்களுக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.
மேலும் எதிர் தரப்பு வழக்கறிஞர்களைப் பார்த்து, இனிமேல் இது போன்ற புகார் வராமல் இருக்க குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்றும் நீதிபதி முருகன் அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications