பீகார் தினத்தை மஹாராஷ்டிராவில் நிதிஷ் எப்படி கொண்டாடுகிறார் என பார்க்கிறேன்: ராஜ்தாக்கரே
நாசிக்: மஹாராஷ்டிராவில் பீகார் தினத்தை பீகாரிகள் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது என்று மஹாராஷ்டிர நவநிர்மாண் அமைப்பின் தலைவர் ராஜ்தாக்கரே மீண்டும் எச்சரித்துள்ளார்.
பீகார் மாநிலம் உருவான தினம் பீகார் தினமாக ஏப்ரல் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும் பீகாரிகளும் பீகார் தினத்தை நாளை மறுநாள் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரும் கலந்து கொள்ள உள்ளார்.
மஹராஷ்டிராவில் மராட்டியர்களைத் தவிர வேறு மாநிலத்தவருக்கு எதிராக எப்போதும் வெறுப்பைக் கக்கி வரும் ராஜ்தாக்கரே கோஷ்டி இதற்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரோ, மஹாரஷ்டிரம் செல்வதற்கு விசா எல்லாம் எதுவும் எடுக்க வேண்டியதில்லை என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இதையடுத்து சர்ச்சை பெரிதானது. மஹாராஷ்டிர மாநில முதல்வரும்கூட நிதிஷ்குமார் வராமல் தவிர்க்கட்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நாசிக் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்தாக்கரே, தமது மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் நிதிஷ்குமார் மிகவும் நல்லவர்தான் என்றார்.
அதேநேரத்தில் பீகார் தினத்தை மஹாராஷ்டிராவில் கொண்டாடப் போவதாக அறிவித்துள்ளது குறித்து குறிப்பிட்டுப் பேசிய ராஜ்தாக்கரே, அவர் எப்படி மஹாராஷ்டிராவில் பீகார் தினத்தைக் கொண்டாடுவார் என நாம் பார்த்து விடுவோம் என்று மிரட்டலாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications