தொடரும் முட்டுக்கட்டைகளால் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. உயிருக்கு ஆபத்து?
புவனேஸ்வர்: சிறையில் உள்ள விடுவிப்பது தொடர்பாக ஒடிசா மாநில அரசும் மாவோயிஸ்டுகளும் தத்தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் கதி கேள்விக்குறியாகி உள்ளது.
ஒடிசா மாநிலம் லஷ்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜிஹா கிஹாவை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். எம்.எல்.ஏ.வை விடுவிக்க சிறையில் உள்ள மாவோயிஸ்டுகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது மாவோயிஸ்டுகளின் நிபந்தனை.
இதனை ஒடிசா அரசும் ஏற்றுக் கொண்டது. சிறையில் உள்ள யார் யாரையெல்லாம் விடுவிக்கப் போகிறோம் என்றும் அறிவித்துப் பார்த்தது. ஆனால் அதன் பிறகும் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
முட்டுக்கட்டை ஏன்?
ஒடிசா மாநில அரசு , சிறையில் உள்ள மாவோயிஸ்டுகள் தங்களது உறவினர்கள் மூலம் ஜாமின் மனுவைப் போடுமாறு கூறிவருகிறது.
ஆனால் மாவோயிஸ்டுகளும் அவர்களது ஆதரவு பெற்ற பழங்குடி அமைப்பும் இதனை நிராகரித்துள்ளனர். மாநில அரசே குற்றவியல் நடைமுறைச் சட்டம் 321-வது பிரிவின் கீழ் அனைவரையும் அரசே விடுவிக்கலாம் என்பது அவர்களது நிலைப்பாடு.
நீங்கள் கேட்டபடி விடுதலை செய்கிறோம் என்று கூறியதுடன் உரிய நடவடிக்கையும் எடுத்து வருவதால் எம்.எல்.ஏ.வை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும் என்று ஒடிசா உள்துறை செயலாளர் பெக்ரா மாவோயிஸ்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனையும் மாவோயிஸ்டுகளும் அவர்களது ஆதரவு அமைப்புகளும் நிராகரித்துள்ளதுடன் மாநில அரசாங்கம் சிறையில் உள்ளோர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்றாலே பிரச்சனை முடிந்துவிடும் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
இருதரப்பும் தங்களது நிலைப்பாடுகளில் உறுதியாக நிற்பதால் எம்.எல்.ஏ.வின் கதி என்னவாகும் என்பது கேள்விக்குறியாகிக் கிடக்கிறது.












Click it and Unblock the Notifications