நாளை உளநாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாடு: டெல்லி செல்கிறார் ஜெ.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உளநாட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு ஆண்டுதோறும் நடக்கும். இந்த ஆண்டுக்கான மாநாடு நாளை டெல்லியில் நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்கிறார். அவருடன் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ஆர். ராஜகோபால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செல்கின்றனர்.
தமி்ழக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் ஜெயலலிதா நாளை மாலையே டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். முன்னதாக இந்த மாநாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து விவாதிப்பதாக இருந்தது. ஆனால் இந்த விவகாரம் குறித்து தனியாக ஒரு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.
அவரது கோரிக்கையை ஏற்ற பிரதமர் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிக்க வரும் மே மாதம் 5ம் தேதி முதல்வர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். ஏப்ரல் 16 மற்றும் மே 5 ஆகிய தேதிகளில் நடக்கும் முதல்வர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோக் ஆயுக்தா, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலங்கள் உதாசினப்படுத்தப்படுவதாகவும் விமர்சித்து வரும் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், குஜராத் முதல்வர் நரேந்திர மோதி ஆகியோர் நாளை ஒரே இடத்தில் கூடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளைய மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு, போலீஸ் துறை மறுசீரமைப்பு, தீவிரவாத ஒழிப்பு, நக்சலைட் ஒடுக்கம், ஒடிசாவில் எம்.எல்.ஏ. கடத்தல், கடலோர பாதுகாப்பு, மத்திய, மாநில அரசுகளின் உறவு குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications