தென்காசி அருகே பயங்கரம்: பெண் சாமியார் எரித்துக் கொலை
தென்காசி: தென்காசி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் சாமியார் எரித்துக் கொல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியை அடுத்த அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனியாண்டி. அவரது மனைவி பொன்னுத்தாய். அவர்களுக்கு துரைச்சி, மாரியம்மாள் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அவர்களில் துரைச்சிக்கு திருமணமாகிவிட்டது. அவர் தென்காசியில் கணவருடன் வசித்து வருகிறார். மாரியம்மாள் சென்னையில் தங்கி நர்சிங் படித்து வருகிறார். பொன்னுத்தாய் சுற்று வட்டாரப் பகுதி மக்களுககு சாமியாடி குறி சொல்லி வந்தார்.
இந்நிலையில் முனியாண்டி அதிகாலை 4 மணி்க்கு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுவிட்டார். வீட்டில் பொன்னுத்தாய் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் பொன்னுத்தாய் வீட்டில் இருந்து புகை வரவே அக்கம்பக்கத்தினர் அவரது மகள் துரைச்சிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது பொன்னுத்தாய் உடல் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜ், ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் பொறுப்பு குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு சிதறிக் கிடந்த பொருட்களை சோதனையிட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
பொன்னுத்தாயி்ன் கழுத்தில் கிடந்த நகைகள், பீரோவில் இருந்த பணம் ஆகியவை திருட்டு போகவில்லை. முனியாண்டிக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஏதேனும் சொத்து தகராறு உண்டா, அல்லது கொடுக்கல், வாங்கலில் தகராறா, அல்லது குறி சொன்னதால் தகராறா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications