விருதுநகர் அருகே இலவச ஆடு கொடுக்கா பஞ்சாயத்து தலைவியின் உறவினருக்கு கத்தி குத்து
விருதுநகர்: விருதுநகரில் தனக்கு இலவச ஆடு கிடைக்காத ஆத்திரத்தில் பஞ்சாயத்து தலைவியின் உறவினரை ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
விருதுநகர் அருகே உள்ள சத்திர ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (40). அந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் இலவச ஆடுகள் வழங்கப்பட்டபோது அவருக்கு ஆடு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சத்திர ரெட்டியபட்டியை பஞ்சாயத்து தலைவியின் கணவர் ரவிச்சந்திரனின் அண்ணன் ராமசாமியைப் பார்த்த கருப்பசாமி தனக்கு ஏன் இலவச ஆடுகள் வழங்கப்படவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு ராமசாமி, தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் தான் ஆடுகள் வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கருப்பசாமி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர் ராமசாமியை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் கருப்பசாமியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications