அடகுக்கடைக்காரரை கொன்ற கொலையாளியின் புது வீடியோ வெளியீடு- சன்மானம் அறிவிப்பு

சென்னை, மதுரவாயலை அடுத்த நெற்குன்றத்தில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வந்த கணேஷ்ராம் (வயது 28) கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அவரிடம் நகை வாங்குவது போல் கடைக்கு வந்த நபரின் நடவடிக்கைகள் கடையின் வீடியோ கேமராவில் பதிவாகி உள்ளது. 12 நிமிட நேரம் ஓடும் இந்த வீடியோ காட்சியை போலீசார் நேற்று வெளியிட்டனர்.
அதில் கணேஷ்ராமை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலையாளி வந்திருப்பது தெளிவாகப் பதிவாகி உள்ளது.
வீடியோவில் பதிவாகி இருப்பது என்ன?
பேக்குடன் டீ சர்ட் அணிந்து வந்த கொலையாளி முதலில் கணேஷ்ராமிடம் நகைகளைப் பற்றி கேட்கிறார். கணேஷ்ராமும் நகைகளைக் காண்பிக்கிறார். ஆனால் புதிய நகை மாடல்களைக் கேட்டபடியோ அந்த நபர் உள்ளேயும் வெளியேயும் நோட்டம் விடுகிறார்.
கணேஷ்ராம் திரும்பும்போது கத்தியை ஒருமுறை எடுக்க முயற்சித்தாலும் அது பலனளிக்காததால் நகை மாடல்களைப் பார்த்தபடியே பம்முவதும் பதிவாகி உள்ளது.
ஒருகட்டத்தில் கடையில் கேமரா இருப்பது தெரியவந்ததால் முகத்தை மறைக்கும் முயற்சியாக முடியை கோதிவிடுவது போல் அந்த நபர் நடிக்கிறார்.
சில நகைகளின் விலை விவரத்தைக் கேட்க அதற்கு கணேஷ்ராம் கால்குலேட்டர் மூலமாக கணக்குப் போட்டுக் கூறுவதும் பதிவாகி உள்ளது. கொலை செய்துவிட்டு வெளியே செல்லும் காட்சியும் இந்த கேமராவில் பதிவாகி இருக்கிறது.
இந்த வீடியோ காட்சிகள் தமிழகத்தின் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சன்மானம்
கொலையாளி குறித்த தகவல்கள் குறித்து பொதுமக்கள் துப்பு கொடுத்தால் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.
கொலையாளி பற்றிய தகவல்களை 8939966985, 9940696901, 9840930049, 9940239567, 9840101077, 9840139599 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
காதலி
இதனிடையே கணேஷ்ராமின் காதலி என்று கருதப்படும் பெண்ணிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ கேமிராவில் பதிவான நபர் மூலம் அந்தப் பெண்தான் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
அந்த பெண்ணிடம் கணேஷ்ராம் 1 கிலோ நகைகளைக் கொடுத்து வைத்திருந்ததாகவும் அதைத் திருப்பி கேட்டதாலேயே கேமிராவில் பதிவான நபரின் உதவியுடன் கொலை செய்திருக்கலாம் என்பதும் போலீசார் கருத்து.












Click it and Unblock the Notifications