எதியூரப்பா மீது சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற கமிட்டி பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

Yeddyurappa
டெல்லி: கர்நாடக முதல்வராக இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்ட விரோத சுரங்கத் தொழிலுக்கு அனுமதி அளித்த மூத்த பாஜக தலைவர் எதியூரப்பா மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் எதியூரப்பா முதல்வராக இருந்தபோது நடந்த சட்ட விரோத சுரங்க ஊழல் புகார் குறித்து, கர்நாடக லோக் அயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். சட்டவிரோத சுரங்கம் நடத்த அனுமதி வழங்கியதால், கர்நாடக அரசுக்கு ரூ.16,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து எதியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இந் நிலையில் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது செல்லாது என்று, கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தன் மீதான ஊழல் புகார்கள் எல்லாமே துடைக்கப்பட்டதாகக் கூறிக் கொண்ட எதியூரப்பா, தன்னை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று கட்சித் தலைமையை மிரட்டி வருகிறார்.

இதற்கிடையில், சட்டவிரோத சுரங்க ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த உயர் மட்டக் குழு தனது அறிக்கையை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்சிடம் தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், சட்ட விரோத சுரங்க தொழில் முறைகேடு தொடர்பாக எதியூரப்பா மீது விசாரணைக்கு உத்தரவிடுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சுரங்க நிறுவனங்கள், எதியூரப்பா குடும்பத்தினர் ஆரம்பித்த பல அறக்கட்டளைகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை அள்ளித் தந்துள்ளன. இது சுரங்கம் ஆரம்பிக்க எதியூரப்பா தந்த அனுமதிக்காக தரப்பட்ட லஞ்சமாகக் கருதப்படுகிறது.

மேலும் எதியூரப்பாவின் மகன்கள் விஜயேந்திரா, ராகவேந்திரா, மருமகன் சோஹன்குமார் ஆகியோரின் நிலங்களை மிக மிக அதிகமான விலை கொடுத்து ஜிண்டால் தொழில் குழுமத்தைச் சேர்ந்த வெஸ்ட் மைனிங் லிமிடெட் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இதுவும் சுரங்கம் ஆரம்பிக்க எதியூரப்பா தந்த அனுமதிக்காக தரப்பட்ட லஞ்சமாகவே கருதப்படுகிறது.

அதுவும் பெங்களூரில் புதிய லே-அவுட் அமைக்க என்று கூறி விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி அதை தனது மகன்களுக்கு ஒதுக்கிவிட்டு, பின்னர் அதை ஜிண்டால் நிறுவனத்துக்கு விற்று இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர் எதியூரப்பா அண்ட் கோ.

பெங்களூரு வட்டம் ரேச்சனஹள்ளி கிராமத்தில் 1.12 ஏக்கர் நிலத்தை மாநில அமைச்சரவையின் ஒப்புதலோடு லே-அவுட் அமைக்க என்று கர்நாடக அரசு வாங்கியது. அந்த நிலத்தில் விஜயேந்திரா, சோஹன்குமார் ஆகியோர் 0.5 ஏக்கர் நிலத்தை வாங்கினர். ராகவேந்திரா தனியாக 0.5 ஏக்கர் வாங்கினார். மூவரும் தலா ரூ. 20 லட்சம் கொடுத்து இந்த நிலத்தை வாங்கினர்.

வெறும் ரூ. 20 லட்சத்துக்கு வாங்கிய இந்த நிலத்தைத் தான் வெஸ்ட் மைனிங் லிமிடெட் நிறுவனம் இவர்களிடமிருந்து ரூ. 20 கோடி கொடுத்து வாங்தியது.

லே அவுட் அமைக்க என்று பொது நலனுக்காகக் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலம் அதற்காகப் பயன்படுத்தப்படாமல் முதல்வரின் உறவினர்களுக்கு விற்கப்பட்டு, அது பின்னர் தொழில் நிறுவனத்துக்கு அதிக லாபத்துக்குக் கைமாற்றிவிடப்பட்டுள்ளது.

இதில் சட்ட மீறலும் விதி மீறல்களும் நடந்துள்ளன. இவையெல்லாம் திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளன. இதற்கு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் முதல்வரின் நெருங்கிய உறவினர்கள் நடத்தும் பிரேரண அறக்கட்டளைக்கு செளத் வெஸ்ட் மைனிங் லிமிடெட் நிறுவனம் ரூ. 10 கோடியையும் தனியே வழங்கியுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் பண ஆதாயம் கிடைக்கும் வகையில் முறைகேடாகவும் சட்டவிரோதமாகவும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் எதியூரப்பா.
எனவே இந்த விவகாரத்தை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

எதியூரப்பா ஆலோசனை:

மீண்டும் முதல்வர் பதவியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் எதியூரப்பாவுக்கு இந்த நடவடிக்கை பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றக் குழுவின் பரிந்துரை வெளியானதும் கர்நாடக அமைச்சர்கள் உள்ளிட்ட எதியூரப்பா ஆதரவு எம்எல்ஏக்கள், பாஜக தலைவர்கள் அவரது வீட்டில் குவிந்தனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவர்களுடன் எதியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், இது உச்ச நீதிமன்றக் குழுவின் சிபாரிசு தான். இறுதி முடிவு அல்ல. இதை ஏற்பது அல்லது நிராகரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.

நீதியின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உச்ச நீதிமன்ற குழு அளித்த அறிக்கையை சட்டப்படி எதிர்கொள்வேன். இந்த வழக்கில் நிரபராதியாக வெளியே வருவேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+