பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை மன்னர் குடும்பத்திடமிருந்து அரசு எடுத்துக் கொள்ளாது! - கேரளா
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள மாநில ஏற்காது என்று அம்மாநில உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு பத்மநாபசுவாமி கோயிலைப் பார்வையிட்ட அவர் ஆலய வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை மாநில அரசு ஏற்காது. அப்படியான ஒரு எண்ணம் கிடையாது. கோயிலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பும் கடமையாகும். திருவாங்கூர் மன்னர் வம்சத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுதான் கோயில் நிர்வாகத்தை நிர்வகிக்கிறது. இதில் மாநில அரசு தலையிட்டு மேலும் புதிய சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை.
மத்திய ரிசர்வ் வங்கிக்கு இணையாக பத்மநாபசுவாமி கோயிலுக்கு 24 மணி நேர பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. கமாண்டோ படையினருடன் மாநில போலீசார் இணைந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அறைகளில் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
பெருஞ்செல்வங்கள் குவிந்துள்ள இக்கோயில் திருவிதாங்கூர் மன்னர் வசமத்தினர் எனும் தனியாரிடம் இருப்பதைவிட மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே சரியானது என்று பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரை எதிர்த்துக் கொள்ள முடியாத மாநில அரசு, கோயில் நிர்வாகத்தை ஏற்க முடியாது என கைவிரித்துள்ளது.












Click it and Unblock the Notifications