தூத்துக்குடியில் இன்வெர்ட்டர் வெடித்து பியூட்டி பார்லர் நாசம்: ரூ. 1 லட்சம் சேதம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் இன்வெர்ட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் பார்லரில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
தூத்துக்குடி ரயில்வே ஒன்றாம் கேட் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பசுபதி. அவரது மனைவி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் பியூட்டி பார்லரை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பார்லர் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் அங்கு இருந்த அழகு சாதனப் பொருட்கள், பர்னிச்சர்கள், ஷோகேஸ்கள், இன்வெர்ட்டர் மற்றும் மாடியில் அமைக்கப்பட்டிருந்த கூரை செட் போன்றவை எரிந்து நாசமாகின.
இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
பியூட்டி பார்லரில் இன்வெர்ட்டர் ஆப் செய்யாமல் இயங்கிய நிலையில் இருந்துள்ளது. இப்பகுதியில் நேற்றிரவு அடிக்கடி மின்தடை ஏற்பட்டுள்ளது. அப்போது உயர் மின்அழுத்தம் காரணமாக இன்வெர்ட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்து மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications