தனி ஈழப் போராட்டத்தில் பயங்கரவாதம் தலையிடக் கூடாது என்பதே எமது நிலை: கருணாநிதி

தென்சூடானைப் போல, கொசாவைப் போல, கிழக்கு திமோரைப் போல தனித் தமிழ் ஈழத்தை பொதுவாக்கெடுப்பின் மூலம் உருவாக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியிருந்தார். இதற்கு இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தனித் தமிழீழம் கோருவது ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்துள்ள பதில் கருத்துகள்:
கேள்வி: நீங்கள் தனித் தமிழ் ஈழம் பற்றி சொல்லிய கருத்துக்களுக்கு மாறாக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சே, தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில் பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக்கூடாது என்கிற கருத்து உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட தி.மு.க.வும் அதே கருத்தைத்தான் கொண்டது. நாங்கள் பயங்கரவாதத்துக்கு தயாராக இல்லை.
கேள்வி: தனித் தமிழ் ஈழம் கேட்பது என்பது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் சொல்லியிருக்கிறாரே?
பதில்: தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எதிராக இலங்கையில் சிங்களவர்களால் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற கொடுமைகளும் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம்.
கேள்வி: தமிழ்நாட்டில்தான் தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, இலங்கை விவகாரத்தில் தலையிடாமல், இந்தியாவில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேளுங்கள் என்று கோத்தபாய சொல்லியிருக்கிறாரே?
பதில்: இந்தியாவில் இருக்கின்ற மத்திய அரசு, இலங்கையில் இருக்கிற அரசைப்போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை. தமிழர்கள் இங்கே நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள். எனவே, எங்களுக்கு இந்திய அரசை விட்டுப்பிரிந்துபோக வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications