இந்திய கம்யூனிஸ்ட்டுக்கே புதுக்கோட்டையை அதிமுக தர வேண்டும்: விஜயகாந்த்
சூலூர் பேரவைத் தொகுதிக்குட்பட்ட செஞ்சேரிமலையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி கொடுப்பதற்கு பதிலாக தமிழக அரசு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் அந்த குடும்பம் வறுமையில் இருந்து மீளும். அ.தி.மு.க. அரசு கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்காமல், வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
அ.தி.மு.க-வும், தி.மு.க -வும் விஷச் செடிகள். மின்வெட்டு, அராஜகம் போன்றவைகளால் தான் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தற்போது அதிமுக ஆட்சியில் மின் தடையும், ஊழலும் பல்கிப் பெருகியுள்ளது. இதனால் அடுத்த முறை, அ.தி.மு.க., எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில், ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என, அ.தி.மு.க.-வினர் கூறுகின்றனர். 145 சீட்டுகள் உள்ள அ.தி.மு.க. தற்போதைய இடைத் தேர்தலில் முன்பு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே அந்த தொகுதியை விட்டுக் கொடுக்கலாம்.
தே.மு.தி.க வெற்றி பெற்றுள்ள 29 தொகுதிகளிலும் மக்களுக்காக தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதியில் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி வினியோகம் செய்வோம் என்றார் அவர்.