Dhanush: மெய்யாலுமாவே அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? முக்கிய பிரமுகர் கொடுத்த விளக்கம்!
சென்னை: தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய கொடியை அறிமுகத்தியுள்ளார் என்றும் அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என்றும் கூறப்படும் தகவல்கள் குறித்து தனுஷ் ரசிகர் மன்றத் தலைவரும் இயக்குநருமான சுப்பிரமணிய சிவா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்து விஜய் வென்ற நிலையில் தற்போது மேலும் சில நடிகர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என அவர்களது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

அண்மையில் கூட ராகவா லாரன்ஸ், "நான் அரசியலுக்கு வர வேண்டுமா என்பது குறித்து பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்" என கேட்டிருந்தார். அது போல் தனக்கு மரியாதை கொடுக்கும் கட்சியில் இணைவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் சூர்யா, சிம்பு உள்ளிட்டோரின் ரசிகர்களும் அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், அண்மையில் "கர" எனும் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள "ஓம்" திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனிடையே தனுஷ் போட்டோ இடம் பெற்றிருந்த ரசிகர் மன்றக் கொடியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவியது. அந்தக் கொடியில் "எண்ணம் போல் தான் வாழ்க்கை" என்று இருந்தது.
இதனால் தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். இது அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனுஷ் எப்போது அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்தன.
இந்த நிலையில் "அர்ஜுனன் பேர் பத்து" திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ் ரசிகர் மன்றத் தலைவரும் இயக்குநருமான சுப்பிரமணிய சிவா, தனுஷின் கொடி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: "இந்த கொடி புதிது அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திருமணம், காதுகுத்து விழா, திரைப்பட ரிலீஸ் உள்ளிட்ட நிகழ்வுகளில் பயன்படுத்தி வரும் கொடிதான்.
இந்த ஆண்டுக்கான ரசிகர் மன்ற கூட்டத்தில் சில ரசிகர்கள் அந்த கொடியை காரில் பொருத்தும் வகையில் புதிய வடிவில் வடிவமைத்துக் கொண்டனர். அதை அவர்கள் பொருத்தியதை பார்த்து தனுஷுக்கான புதிய கொடி, அவர் விரைவில் அரசியலுக்கு வருகிறார் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டது" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனுஷின் அரசியல் வருகை என்ற வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் கொரோனா காலத்தில் தன்னால் பொதுமக்களோ தனது ரசிகர்களோ கொரோனாவால் பாதித்துவிடக் கூடாது என்பதாலும் அவரது உடல்நிலை சரியில்லாததாலும் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
அது போல் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால் இரு தேர்தல்களை தனித்து சந்தித்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து மாநிலங்களவை எம்பியாகிவிட்டார்.
அது போல் சரத்குமார் ஏற்கெனவே சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கியிருந்தார். சில ஆண்டுகள் அதில் பயணித்து எம்எல்ஏ, எம்பியான அவர் திடீரென தனது கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டார். தற்போது அங்கு பதவி ஏதும் கிடைக்காததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். சிம்பு அரசியலுக்கு வருவது குறித்து எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. எது எப்படியோ விஜய்யின் வெற்றி, "அடடா மிஸ் பண்ணிட்டோமே" என அரசியலுக்கு வராத மற்ற நடிகர்களை நிச்சயம் மனதளவில் நினைக்க வைக்கும் என்றே சொல்லப்படுகிறது.













Click it and Unblock the Notifications