சத்தீஸ்கரில் நெல்லையைச் சேர்ந்த கலெக்டரைக் கடத்திய மாவோயிஸ்ட்டுகள்: மீட்கக் கோரும் தந்தை
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்ட்டுகளால் நேற்று கடத்தப்பட்டார். அவரது பாதுகாப்புக்காக இருந்த 2 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மேனன் நெல்லை தியாகராஜ நகர், ராம்நகரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இவரது தந்தை வரதாஸ் வள்ளியூரில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் கங்காதேவி கருவூலத்தில் பணியாற்றியவர். இவர் இறந்துவிட்டார்.
அலெக்ஸ் பால் மேனன் பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் பிளஸ் டூ முடித்தார். பின்னர் திண்டுக்கல் ஆர்.வி.எஸ். கல்லூரியில் பி.இ. பட்டம் பெற்றார். இளம் வயது முதல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. இதனால் பி.இ. படிப்பை முடித்தவுடன் டெல்லி சென்று சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகியுள்ளார். 2006 பேட்ஜில் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று சத்தீஸ்கர் மாநில பிரிவில் ஒதுக்கீடு செய்யப்பட்டார்.
அலெக்ஸ் பால் மேனனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தான் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி புஷ்ப பாக்கியம் பி.டெக். எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். இவர் கடத்தப்பட்ட செய்தி தெரிந்ததும் நெல்லையில் உள்ள அவரது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள மேனனின் தந்தை வரதாசை தொடர்பு கொண்டபோது, நான் சத்தீஸ்கர் செனறுவிட்டு கடந்த வியாக்கிழமை தான் சென்னை திரும்பினேன். எனது மகன் நாட்டிற்காக பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெறறார். இந்நிலையில் அவர் கடத்தப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரை பத்திரமாக மீ்ட்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உளளது. எனது மகனை பத்திரமாக மீட்க தமிழக அரசு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்றார்.