திருவாரூர் மாவட்ட பாஜக தலைவரின் வீடு, வட்டிக் கடைகளில் வருமான வரித்துறை ரெய்ட்!
மன்னார்குடி: திருவாரூர் மாவட்ட பாஜக தலைவரின் வீடு, வட்டிக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட பாஜக மாவட்டத் தலைவராக இருப்பவர் சிவ காமராஜ். இவர் மாநில அளவிலான பொறுப்பிலும் உள்ளார்.
இவர் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே சாந்தி நிதியகம் என்ற வட்டிக் கடையும், முத்திரைத் தாள் விற்கும் கடையும் வைத்துள்ளார்.
இந் நிலையில் திருவாரூர் மாவட்டம் பாலக்கோட்டையில் உள்ள சிவ காமராஜ் வீட்டில் இன்று காலை 7 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதே போல பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜின் வட்டிக் கடை மற்றும் முத்திரைதாள் கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் திருவாரூர் பேருந்து நிலையத்தில் உள்ள இவரது நிதி நிறுவனத்திலும், பாலக்கோட்டையில் உள்ள அவரது பார்ட்னரும் வர்த்தக சங்கச் செயலருமான சேதுராமனின் கடைகளிலும் சோதனை நடக்கிறது.
மேலும் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்கு சொந்தமான டிபார்ண்ட்மென்டல் ஸ்டோரிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறிய கடைகளில் சோதனை நடப்பது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் பட்டுக்கோட்டையில் ரயில்வே ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம், திமுக எம்பி டி.ஆர்.பாலுவை விமர்சனம் செய்துள்ளார். அத்துடன் மன்னார்குடிக்கு டி.ஆர்.பாலு முயற்சியில் கொண்டுவரப்பட்ட புதிய ரயில் பாதை திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் அவர் பேசினாராம்.
இதைத் கண்டித்து மன்னார்குடி வர்த்தக சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மன்னார்குடியில் பழனிமாணிக்கத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் கலந்துகொண்ட பாஜக பிரமுகர் சிவ காமராஜ், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பழனி மாணிக்கத்தை கடுமையாக விமர்சித்துப் பேசிய நிலையில், இந்த வருமான வரி சோதனை நடத்தப்பதாக செய்திகள் பரவியுள்ளன.












Click it and Unblock the Notifications