புதுக்கோட்டையில் 'நிவாரணப் பணிகள்' முடிந்ததும் தேர்தல் அறிவிப்பார்கள்-கருணாநிதி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:
கேள்வி: புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி எப்போது அறிவிப்பார்கள்?
பதில்: தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருக்கின்றன. அதிலே ஒரு தொகுதி, விரைவில் இடைத்தேர்தல் நடைபெறப்போகின்ற தொகுதி, அந்த தொகுதிக்காக மட்டும் அ.தி.மு.க. அரசு 50 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த தொகை எந்த விதமான டெண்டரும் இல்லாமல் அங்கே செலவழிக்கப்படுகிறதாம். புதுக்கோட்டை தொகுதியில் நிவாரண பணிகள் எல்லாம் நடந்து முடிந்த செய்தி தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டவுடன் தேதி அறிவிப்பு வந்துவிடும்.
கேள்வி: சட்டிஸ்கர் மாநிலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சி தலைவர் அலெக்ஸ் பால்மேனன் என்பவர் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டிருக்கிறாரே?
பதில்: அவருடைய இளம் மனைவியும், உறவினர்களும் அவருடைய விடுதலைக்காக அரசு உதவிட வேண்டுமென்று உருக்கத்தோடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணத்திற்காக அவர் கடத்தப்பட்டார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சத்தீஷ்கார் முதல்-அமைச்சரோடு தொடர்பு கொண்டு இதைப் பற்றி பேசியிருக்கிறார். கடத்தப்பட்ட அந்த அதிகாரியை மீட்பதற்கு அந்த மாநில அரசுக்கு மத்திய அரசு எல்லா வகையான உதவிகளையும் செய்து, அவரை விரைவாக மீட்டிட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்.வரதராசன் திடீரென்று மறைந்த நிலையில் தமிழகத்திலே உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சரோ, அமைச்சர் ஒருவரோ கூட நேரில் வந்து இரங்கல் தெரிவிக்கவில்லையே?
பதில்: தோழர் வரதராசன் உடல் வைக்கப்பட்டிருந்த தியாகராயர் நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஹெலிகாப்டர் வந்திறங்க வசதி இல்லை என்று கூறி விட்டார்களாம்! தோழர் வரதராசன் சிறுதாவூர் இடம் பற்றி புகார் கொடுத்தவராம்! அதனால் அஞ்சலி செலுத்த வரவில்லை போலும்!
கேள்வி: தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை கையகப்படுத்தும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் 22-12-2011 அன்று நிறைவேற்றப்பட்டதை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது பற்றி?
பதில்: தி.மு.கழகத்தின் மீது, தி.மு.க. அரசு செய்த பல்வேறு நல்ல திட்டங்கள் மீது இந்த ஆட்சியினருக்கு அந்த அளவிற்கு ஒரு வெறுப்புணர்வு-காழ்ப்புணர்வு. எதையெடுத்தாலும் அதை தூக்கிப்போட்டு உடைக்க வேண்டுமென்று எண்ணுகின்ற மனப்பாங்கு. அந்த வரிசையில்தான் ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலகத்தை காலி செய்வதற்கு நினைத்தார்கள். அதுபற்றிய வழக்கிலேதான் 17-4-2012 அன்று நீதிபதி ராமசுப்பிரமணியம் அவர்களால் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதும், நீதிமன்றங்கள் அதைத் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நடந்த போதிலும், இந்த அரசு திருந்துவதாக இல்லை. திருத்திக்கொள்வதாகவும் இல்லை.
கேள்வி: இந்த அரசு செங்கல்பட்டு ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாமில் இருப்பவர்களின் நலன்களைக் கூட கவனிக்கவில்லையே?
பதில்: அந்த முகாமிலே இருப்பவர்கள் எனக்கு கூட தொலைபேசி மூலமாக தங்கள் சிரமங்களைத் தெரிவித்தார்கள். தி.மு.கழக அரசு இருந்தபோது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 15 பேரை அங்கிருந்து விடுதலை செய்ததாகவும், ஆட்சி மாறியதிலிருந்து யாரையும் விடுதலை செய்யவில்லை என்றும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தார்கள். குறைந்த எண்ணிக்கையினரே அங்கே இருப்பதாக தெரிகிறது. அவர்களை விரைவில் விடுவிக்க இந்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications