மதுரையில் நிலத்தகராறில் அடிதடி: முன்னாள் திமுக மேயர் தேன்மொழியின் கணவர்- மகன் கைது
மதுரை: நிலத்தகராறு தொடர்பாக வழிமறித்துத் தாக்கிய மதுரை மாநகராட்சியின் முன்னாள் திமுக மேயர் தேன்மொழியின் கணவரும் திமுக பிரமுகருமான கோபிநாதனும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை திமுக பகுதி செயலாளர் கோபிநாதன் முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவராவார். இவருக்கும், சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் ரூ.29 லட்சம் மதிப்புள்ள காலிமனை வாங்கியது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந் நிலையில் நேற்று ஜெய்ஹிந்த்புரத்தில் தன்னை வழிமறித்து தாக்கியதாக கோபிநாதன், அவரது மகன் பிரபாகரன் ஆகியோர் மீது சுப்பிரமணியன் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து கோபிநாதனையும், அவரது மகன் பிரபாகரனையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சுப்பிரமணியன் மீது கோபிநாதன் ஒரு புகார் கொடுத்தார். இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் ஆபாசமாக பேசுதல், வழிமறித்து தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேலம் அருகே திமுகவினர் கோஷ்டி மோதல்:
இந் நிலையில் சேலம் அருகே முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்களுக்கும், ஸ்டாலின் ஆதரவாளரான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனின் எதிர் கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்தூர் அருகே உள்ள கம்மம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக வந்த பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனிடம், வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளரான நகராட்சி செயலாளர் ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications