வாடகைக்கு இருப்போரிடம் வீட்டு உரிமையாளர்கள் அதிக மின் கட்டணம் வசூல்: பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: தமிழ்நாட்டில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட வீட்டு உரிமையாளர்கள் அதிக மின் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று தேமுதிக எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன் சட்டசபையில் கூறினார்.
சட்டசபையில் மின்சாரத் துறை மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்,
பண்ருட்டி ராமச்சந்திரன்: தமிழ்நாட்டில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட வீட்டு உரிமையாளர்கள் அதிக மின் கட்டணம் வசூலிக்கிறார்கள். எனவே மின் வாரியமே சப்-மீட்டர் பொருத்தி அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: வாடகைக்கு குடியிருப்பவர்கள் பாதிக்காமல் இருக்க இதற்காக தனித் தனி மீட்டராகவோ, சப்-மீட்டராகவோ வைக்க எந்த தடையும் இல்லை.
பண்ருட்டி ராமச்சந்திரன்: தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துகிறோம். 1987ல் இது நடைமுறைக்கு வந்தது. காசாளர்கள் நிறைய பேர் தேவைப்பட்டதால் இந்த நிலை கொண்டு வரப்பட்டது. தற்போது கம்ப்யூட்டர் மூலமும், ஆன்லைன், தபால் நிலையம், மற்றும் வங்கிகள் மூலமும் மின் கட்டணம் செலுத்துகிறோம். எனவே 2 மாதத்திற்கு ஒரு முறை என்பதை மாற்றி மாதற்தோறும் மின் கட்டணம் செலுத்த அரசு ஏற்பாடு செய்யுமா?.
போன் பில், வீட்டு வாடகை, தண்ணீர் கட்டணம் என அனைத்தும் மாத கட்டணமாக இருக்கும் போது மின் கட்டணத்தை அதே போல் மாற்ற வேண்டும். இது மாத சம்பளதாரர்களுக்கு வசதியாக இருக்கும்.
விஸ்வநாதன்: 2 மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவது நீண்ட காலமாக அமலில் உள்ளது. பொது மக்கள் ஒரே தேதியில் மின் கட்டணம் செலுத்துவது மாற்றியமைக்கப்பட்டு ஒவ்வொருவரும் எந்தெந்த தேதியில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அதில் மக்களுக்கு குழப்பம் இல்லை. ஒரே நாளில் மின் கட்டணம் செலுத்த கூட்டம் கூடுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரன்: ஏழைகள் பயன்படுத்தும் 100 யூனிட் மின் கட்டணத்தை குறைக்க அரசு முன் வருமா?
விஸ்வநாதன்: ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசுக்கு அடக்க விலை ரூ.5.98 ஆகிறது. தற்போது கட்டண உயர்வுக்கு பிறகு சராசரி வருவாய் ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் 29 காசாக உள்ளது. எனவே இப்போதும் ஒரு யூனிட்டுக்கு அரசுக்கு 69 பைசா இழப்பு ஏற்படுகிறது. தற்போது 100 யூனிட்டுக்கு 2 ரூபாய் 60 காசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இந்த அரசு மானியமாக ரூ.1.60 வழங்குகிறது. ஆனால் பொது மக்களிடமிருந்து யூனிட்டுக்கு 1 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது. கொண்டு வரும் வழித்தடங்கள் 3 தான் உள்ளது. அதன்மூலம் 3,000 மெகாவாட் மின்சாரத்தைத் தான் கொண்டு வர முடியும். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை இருப்பதால் அவர்களும் இதே பாதையில் தான் மின்சாரத்தை வாங்கி வருகிறார்கள்.
மேலும் மின் பாதையை அமைக்க வேண்டும் என பிரதமருக்கு புரட்சி தலைவி கடிதம் எழுதியிருந்தார். புதிய மின்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை அமைத்து முடிக்க இன்னும் 2, 3 ஆண்டு ஆகும். அதன் பிறகு தடையின்றி வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரத்தை எளிதில் கொண்டு வர முடியும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications