இனி எந்த இடைத் தேர்தலிலும் போட்டியிட மாட்டோம்: ராமதாஸ்

சேலத்தில் பாமக சார்பில் பட்டதாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில் கட்சியன் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் ராமதாஸ் பேசுகையில்,
30 ஆண்டாக திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் முதலமைச்சராக இருந்துள்ளனர். ஆனால் நாம் (வன்னியர்கள்) 10 நாள் கூட முதலமைச்சராக இருக்கவில்லை. இதற்குக் காரணம் நம்மிடையே ஒற்றுமை இல்லாதது தான்.
கிராமங்களில் இன்னும் பலர் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டும். இதை பெற்றுத்தர பாமக பாடுபடும்.
பெண்களையும், இளைஞர்களையும் சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டு கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது. நாங்கள் பென்னாகரம் இடைத்தேர்தலில் மட்டும் தான் போட்டியிட்டோம். இனி எந்த இடைத் தேர்தலிலும் போட்டியிட மாட்டோம்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 50,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 தருவார்கள் என்றார்.
இலங்கைப் பயணம்-மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்:
முன்னதாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்ததாக இலங்கைக்குச் சென்றிருந்த எம்.பிக்கள் குழுவினர் தெரிவித்தனர். ஆனால் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளார்.
எனவே இலங்கை பயணத்தின்போது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டதா என்பது குறித்து மத்திய அரசும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜும் விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் விஷயத்தில் இந்திய தலைவர்கள் இலங்கை செல்லும்போது ஒரு வாக்குறுதி அளிப்பதும், அவர்கள் தாயகம் திரும்புவதற்குள் அதை மறுப்பதுமாக இலங்கை அரசு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது.
ஈழத் தமிழர்களின் வாழ்வில் இலங்கை அரசு இப்படி விளையாடுவதை இனியும் அனுமதிக்க முடியாது. எனவே, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா. மூலம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications