கேரளாவில் மழை-புளியங்குடியில் எலுமிச்சை விற்பனை மந்தம்

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் உள்ள எலுமி்ச்சை மார்க்கெட் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. அதே போல் உற்பத்தியிலும் புளியங்குடி வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கிறது.
இப்பழங்களை விற்பனை செய்வதற்காக புளியங்குடியில் எலுமி்ச்சை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. 27 கடைகள் மூலம் விவசாயிகள் கொண்டு வரும் பழங்கள், ஆயிரம் பழங்கள் இன்ன விலை என்றும், அதே போல் இந்த ஆண்டும் இந்த விலை எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு கொள்முதல் செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் கேரள மாநிலத்திற்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள மக்களின் தேவை போக பெரும்பாலான எலுமிச்சை பழங்கள் கன்டெய்னரில் அடைக்கப்பட்டு விமானம் மற்றும் கப்பல் மூலம் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செயயப்படுகிறது.
இதன் மூலம் அரசுக்கு பெருமளவு அந்நிய செலவாணி கிடைக்கிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு இதே போல் ஏப்ரல் மாதத்தில் புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் ஆயிரம் எலுமிச்சை பழங்கள் ரூ.5000 வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இன்றைய நிலவரப்படி அதிகபட்சமாக ரூ.3000 வரை விற்கப்பட்டு வருகிறது.
இதற்கு கடந்த 10 தினங்களாக கோடை மழை இடை இடையே பெய்ததும், கேரளாவில் ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருவதும் எலுமிச்சை விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளதாக காரணங்கள் கூறப்படுகின்றன.












Click it and Unblock the Notifications