மறைந்த முத்துக்குமரன் நினைவுகளில் கண்ணீர் சிந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்
நெடுவாசல்: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்து சாலை விபத்தில் பலியான எம்.எல்.ஏ. முத்துக்குமரனின் படத்திறப்பு நிகழ்ச்சி அவரது சொந்த கிராமமான நெடுவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, டி. ராஜா, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், விஸ்வநாதன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர்.
முத்துக்குமரன் படத்தை திறந்து வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் பேசியதாவது:
இழப்புகளையும் சோதனைகளையும் சந்தித்து வளர்ந்த இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். முத்துக்குமரன் குடும்பம் ஒரு துளி கண்ணீர்கூட விட அனுமதிக்க விட மாட்டோம்.
முத்துக்குமரன் ஆற்றிய பணி எங்கள் கட்சிக்கு பெருமை என்றால் அப்படிப்பட்ட தோழரை இழந்து விட்டோமே என்று துடிக்கிறோம். முத்துக்குமரன் எடுத்துக் கொண்ட கொள்கை கோட்பாடுகளை செங்கொடி இயக்கம் காப்பாற்றும் என்றார் அவர் கண்ணீர் மல்க.
மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு பேசியதாவது:
எதிர்கால சந்ததிகளுக்கு முத்துக்குமரன் விட்டுச் சென்றது இலக்கணமான வாழ்க்கையை தான். அந்த இலக்கண பாடத்தில் இளைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அவர் ஆற்றிய பணிகள், சட்டமன்ற கேள்விகள், பேச்சுகள் அனைத்தும் புத்தகமாக வெளி வரும் என்றார் அவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா பேசியதாவது:
புதுக்கோட்டைக்கு நான் 1991-ம் ஆண்டு வந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள தங்க வேண்டும் என்று கூறினர். அப்போது என் கூடவே இருந்து எனக்கு தேவையான மருந்து, உணவு வாங்கி வந்து கொடுத்து பணிவிடை செய்து என்னை உயிர் பிழைக்க வைத்த என் உயிர் தோழன் முத்துக்குமரன் இன்று இல்லை என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கண்ணீருடன் பேசினார்.
முன்னாள் திமுக எம்.பி. ராஜா சிதம்பரம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முத்துக்குமரனை புகழ்ந்து பேசினர்.












Click it and Unblock the Notifications