ஆட்சியர் அலெக்ஸை மீட்க தூத்துக்குடி பேராசிரியருக்கு சத்தீஸ்கர் மாநில அரசு அழைப்பு
தூத்துக்குடி: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோயல் ரிவிங்ஸ்டனுக்கு அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு ஏற்கெனவே பிரதிநிதிகளை நியமித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணியாற்றும் ஜோயல் ரிவிங்ஸ்டன், சத்தீஸ்கர் மாநில முதல்வருக்கு தந்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் மாவோயிஸ்டுகளுடன் பேச்சுநடத்த தாம் தயாராக இருப்பதாக ஜோயல் கூறியிருந்தார்.
ஜோயலின் விருப்பத்தை ஏற்று அவரை சத்தீஸ்கர் மாநிலத்துக்கு வருமாறு மாநில முதல்வர் ராமன்சிங்கின் உதவியாளர் குப்தா அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் சத்தீஸ்கர் புறப்பட்டுச் செல்கிறார். சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங்கை நாளை அவர் சந்திக்க உள்ளார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜோயல், ஆட்சியரின் சொந்த ஊரை சேர்ந்தவர் என்ற முறையில் ஒரு கல்லூரியின் முதல்வராக பணியாற்றும் நான் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் அவரை மீட்பதற்காக மாவோயிஸ்டுகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு செல்ல தயாராக இருக்கிறேன்" என்றார் அவர்.












Click it and Unblock the Notifications