மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்: அப்துல் கலாம் மறைமுக தகவல்

கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்று சில கட்சிகள் கோர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் பாஜகவில் சில தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கலாமை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்பவில்லை. சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பதால் அவரை பிரதமராகாமல் தடுத்தார் கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தச் செய்தியை கலாம் ஒப்புக் கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை.
இதனால் 2007ம் ஆண்டு மீண்டும் அவரையே ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த பாஜக முன் மொழி்ந்தபோது அதை கலாம் ஏற்றுக் கொண்டார். ஆனால், காங்கிரஸ் ஏற்கவில்லை. இதையடுத்து மீண்டும் பதவிக்கு வர விரும்பவில்லை என்று கூறி கடைசி நேரத்தில் கலாம் ஒதுங்கிக் கொண்டார்.
இந் நிலையில், மீண்டும் அவரை முன் நிறுத்த பாஜக மற்றும் சில கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதற்கிடையே இன்று டெல்லியில் கலாமை சந்தித்த நிருபர்கள், மீண்டும் ஜனாதிபதியாக நீங்கள் தயாரா என்று கேட்டதற்கு,
இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள்.. அதன் பின்னர் இந்தக் கேள்வியை என்னிடம் கேளுங்கள் என்று கலாம் பதிலளித்தார்.
இதனால், அவர் மீண்டும் பதவிக்கு வரத் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. இந்த விஷயத்தில் காங்கிரசுக்கு நெருக்கடி தரவே அவர் இவ்வாறு பதில் தந்ததாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications