நாசா விண்வெளி மையத்தை பார்வையிட அமெரிக்கா செல்லும் 100 பள்ளி மாணவர்கள்
சென்னை: அமெரிக்காவில் இருக்கும் நாசா விண்வெளி மையத்தை பார்வையிட சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் 100 பேர் அமெரிக்கா செல்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு இந்திய மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் மாணவர்களை அமெரிக்காவில் இருக்கும் நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த ஆண்டு சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் 100 பேர் மற்றும் அவர்களுக்கு துணையாக ஆசிரியர்கள் 5 பேரும் அமெரிக்கா செல்கிறார்கள்.
அவர்கள் நாளை சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார்கள். அமெரிக்கா செல்லும் அவர்கள் நாசா விண்வெளி மையம், கனடாவில் உள்ள விண்கல் மையம் ஆகியவற்றை பார்வையிட்டு அங்குள்ள விஞ்ஞானிகளையும் சந்தித்து பேசுகிறார்கள்.
நாசா செல்லும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. அதில் அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்ன்டையர், கனடா தூதரக முதுநிலை வர்த்தக ஆணையாளர் சாஹூன் வேடிக், விண்வெளி வீராங்கனை மார்ஷா ஐவின்ஸ், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா திட்ட இயக்குனர் ஸ்ரீமதி கேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்ஷா ஐவின்ஸ் நாசா குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். நாளை அமெரிக்கா செல்லும் மாணவர்கள் வரும் 16ம் தேதி சென்னை திரும்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications