தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கிருஷ்ணகிரியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் தோன்றும் தென்பெண்ணை ஆற்றால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றிக் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அவ்வாறு தடுப்பணை கட்டப்பட்டால் 4 மாவட்டங்களும் பாதிக்கப்படும்.
இந்நிலையில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து இன்று காலை கிருஷ்ணகிரியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக செயலாளர் மாதையன், திருப்பூர் அவைத்தலைவர் துரைசாமி, மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் நகர செயலாளர் பி. வெள்ளைச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் அப்பையா, நகர துணை செயலாளர்கள் சாமித்துரை, ஜெயக்குமார் பாண்டியராஜன், நகர பொருளாளர் தயாளன் உள்பட ஏராளமான மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள் கர்நாடக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.












Click it and Unblock the Notifications