என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைகிறது- கரண்ட் கிடைப்பதில் சிக்கல்வரும்!
நெய்வேலி: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் தீவிரமடைகிறது. சுரங்கம் முன்புகூடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மின்உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 21-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
பிரச்சினையை தீர்க்க 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு வந்தபாடில்லை. இந்த நிலையில், 27-ந்தேதி என்எல்சி 2-வது சுரங்கம் முன்பு மறியலில் ஈடுபட்டனர் தொழிலாளர்கள். இதையடுத்து 2000 தொழிலாளர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி விடுவித்தனர்.
இந்த நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்பில் பதில்மனு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், போராட்டத்தை தொடரவும் தீர்மானித்தனர்.
இன்று காலை நெய்வேலி நிறுவன பஸ் நிலையத்தில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் பேரணியாக என்எல்சி முதல் சுரங்கம் நோக்கி புறப்பட்டு சென்றனர். பின்னர் சுரங்கம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் சுரங்கததில் நிலக்கரி வெட்டியெடுப்பது உள்ளிட்ட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மின் உற்பத்தி குறையும் அபாயம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications