புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட மாட்டோம்: திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு குறித்து, சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேர்காணல் நடந்தது.
இந்த மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகளிடம் முதலில் கூட்டாக ஆலோசனை நடத்திய திருமா, பின்னர் தனித்தனியாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு விருப்ப மனுக்கள் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், வரும் 30ம் தேதி சேலத்திலும், மே 1ம் தேதி திருச்சியிலும், 2ம் தேதி புதுவையிலும், 5ம் தேதி மதுரையிலும் நேர்காணல் நடைபெறும். இதன் பின்னர் அடுத்த மாதம் 2வது வாரத்தில் புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்படும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனனை இன்னும் மீட்க முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாகும். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில், அவரை மீட்க மாநில அரசு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை. யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
இலங்கைக்கு ஏற்கனவே சென்ற எம்பிக்கள் குழு அறிக்கை சமர்பித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது சென்றவர்கள் அறிக்கை சமர்பிக்கவில்லை. மத்திய அரசும் எந்த வித அறிவிப்பையும் அளிக்கவில்லை, நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் இரு அரசு தரப்பும் பெரும் ஏமாற்றத்தைத் தான் தருகிறது. தனி ஈழம் அமைப்பதுதான் இதற்கு சிறந்த தீர்வாக அமையும்.
தனியார் நிறுவனங்களில் இட ஓதுக்கீட்டிற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பெறுவதற்காக நாடு தழுவிய போராட்டங்கள், கூட்டங்கள், கருத்தரங்கு நடத்தப்படும்.
நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளத் தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.
தாழ்த்தப்பட்டவர்கள் மீது பொய் வழக்குள் போடப்படுகின்றன:
இந் நிலையில் கோவை சென்ற அவர் தாழ்த்தப்பட்டவர்கள் மீது பொய் வழக்குள் போடப்படுவதாக குற்றம் சாட்டினார்.
கோவை உக்கடம் இக்பால் திடலில் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய திருமாவளவன்,
இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகி வருகிறார்கள். இந்திய அரசியல் சட்டம் வலியவரை கண்டால் வளைந்து கொடுக்கிறது. எளியவரை கண்டால் எட்டி உதைக்கிறது. தமிழக சிறைகளுக்கு மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்கள் சென்று அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது வெளிவராத ஏராளமான உண்மைகள் தெரியவரும்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானவர்கள், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் இவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாகவோ அல்லது இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவோ இருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது அரசு பயங்கரவாதம் திணிக்கப்படுகிறது. இந்த உலகில் மிகவும் கொடூரமானது அரசு பயங்கரவாதமாகும். பிரிந்து கிடக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்காமல் இருப்பதால் பொய் வழக்குகள் போடப்படுகின்றன.
அன்னா ஹசாரே போலீசாரிடம் அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்துகிறார். அவரை போலீஸ் கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது. பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கினார் என்று அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் இந்த பிரச்சனை விசுவரூபம் எடுத்தது.
இந்தியாவில் பணம் வாங்காமல் தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சி எது? ஊழலில் சிக்காத அரசியல் கட்சி எது? அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழலில் திழைத்துவிட்டன என்றார்.












Click it and Unblock the Notifications