தம்பி நிலத்தையே அமுக்கிய அதிமுக கவுன்சிலர், மனைவி மீது மோசடி வழக்கு
நெல்லை: ஆலங்குளம் அருகே சொந்த தம்பியிடமே ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த அதிமுக கவுன்சிலர் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மோகன்லால். அதிமுகவைச் சேர்ந்த அவர் ஆலங்குளம் பேரூராட்சியில் 6வது வார்டு கவுன்சிலராக உள்ளார். அவரது தம்பி கண்ணன். அவர்களது தந்தைக்கு சொந்தமான இடம் ஆலங்குளம் அருகே உள்ளது. இதில் கண்ணனுக்கு பாகப்பிரிவினைப்படி 1 ஏக்கர் 26 சென்ட் ஒதுக்க வேண்டும். ஆனால் மோகன்லால் அந்த இடத்தை தாயிடம் இருந்து நன்கொடையாக எழுதி வாங்கி தனது மனைவி பெயருக்கு விற்பனை பத்திரம் எழுதி மோசடி செய்துவிட்டார். இதற்கு மோகன்லாலின் மனைவி சுதாவும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும். இது குறித்து கண்ணன் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அதி்முக கவுன்சிலரான மோகன்லால், அவரது மனைவி சுதா ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.