வயிற்றுக்குள் வெடிகுண்டு.. தீவிரவாதிகள் பிளான்: உஷார் நிலையில் அமெரிக்கா
வாஷிங்டன்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் நினைவு நாளையொட்டி தீவிரவாதிகள் ஆபரேஷன் மூலம் தங்கள் உடலுக்குள் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து விமானங்களை தகர்க்கலாம் என்பதால் அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டு இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. இந்நிலையி்ல் அவரது சாவுக்கு பழிவாங்க அல் கொய்தா தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று அமெரிக்கா கருதுகிறது. பொதுவாக தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு வந்து வெடிக்கச் செய்வார்கள்.
ஆனால் வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது அதில் உலோகத் துண்டுகள் சேர்க்கப்படுவதால் மெட்டல் டிடெக்டர் காட்டிக் கொடுத்துவிடுகிறது. இதனால் தற்போது தீவிரவாதிகள் உலோகங்கள் கலக்காத குண்டுகளைத் தயாரித்து ஆபரேஷன் மூலம் வயிறு உள்ளிட்ட பகுதிகளுக்குள் வைத்து வந்து வெடிக்கச் செய்கின்றனர். அவ்வாறு உடலுக்குள் வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வது சாத்தியம் தான் என்று மருத்துவர்கள் தெரிவி்ததுள்ளனர்.
ஒசாமாவின் நினைவு நாளையொட்டி அல் கொய்தா தீவிரவாதிகள் ஆபரேஷன் மூலம் உடலுக்குள் குண்டுகளை வைத்து விமானங்களில் பயணித்து அதை தகர்க்கலாம் என்பதால் அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் பீட்டர் போகார்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த ஆண்டு ஏமனைச் சேர்ந்த அல் கொய்தா தீவிரவாதி இப்ராகிம் அல்-அசிரி உலோகம் இல்லாத குண்டை தனது உடலில் மறைத்து வைத்து விமானத்தில் பயணம் செய்ததை அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.