வரத்து அதிகரிப்பு: நெல்லையில் மல்லிகைப் பூ விலை சரிவு
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதஙகளில் மல்லிகைப் பூ கிலோ ரூ.800 வரை விற்பனையானது. அப்போது முகூர்த்த நாட்களில் கிலோ ரூ.1000 வரை விற்கப்பட்டது. மார்ச் மாதம் முதல் மல்லிகைப் பூ விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் விலை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட் தொடங்கியதும் காலை 10 மணிக்கு ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.100க்கு விற்கப்பட்டது. அடுத்த 2 மணி நேரத்தில் விலை மேலும் குறைந்து ரூ.70க்கு விற்கப்பட்டது. இதனால் உள்ளூர் சில்லரை வியாபாரிகள் அதிக அளவில் பூ கொள்முதல் செய்தனர்.
இது குறித்து மொத்த வியாபாரி சட்டநாதன் கூறுகையில்,
கோடை வெயில் காரணமாக மல்லிகை உற்பத்தி அதிகமாகி சங்கரன்கோவில், கோவில்பட்டி பகுதிகளில் இருந்து அதிக அளவில் வரத்து உள்ளது. இன்னும் சில தினங்களுக்கு மல்லிகைப் பூ தாராளமாக கிடைக்கும். முகூர்த்த நாளில் இதன் விலையில் மாறுபாடு இருக்கும். காற்று அடிக்கத் தொடங்கினால் பூ விலை உயரலாம் என்றார்.
மொத்த விற்பனை விலை குறைவாக இருந்தாலும் பூ கட்டும் கூலி உள்ளிட்ட காரணங்களால் சில்லரை விற்பனை விலை அதிகமாக இருந்தது.