நாகர்கோவில் வங்கியில் ரூ.20,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்: பேட்டரி கடை உரிமையாளர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகையை மீட்க பணம் செலுத்தியவர் கொடுத்த நோட்டுகளில் ரூ.20,000 மதி்ப்புள்ள கள்ளநோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும், வங்கிகளில் பணம் செலுத்தும்போது கள்ள நோட்டுகளையும் சேர்த்து புழக்கத்தில் விடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் உஷார்படுத்தப்பட்டன. மேலும் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை பரிசோதித்து வாங்குமாறு வங்கி காசாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று நாகர்கோவில் கே.பி. ரோட்டில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு நாகர்கோவில் செட்டிகுளத்தைச் சேர்ந்த கிரகரி கென்னடி என்பவர் அடகு வைத்த நகையை மீட்க வந்தார்.
அடகு வைத்த நகையை மீட்க வட்டியுடன் சேர்த்து ரூ.9 லட்சம் செலுத்தினார். அவர் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 20 நோட்டுகள் மீது வங்கி ஊழியர்களுக்கு சந்தேகம் வந்தது. அவற்றை பரிசோதித்த போது அந்த 20 நோட்டுகளும் கள்ள நோட்டுகள் என தெரிய வந்தது. உடனே இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சேகர் சிங், சப்-இன்ஸ்பெக்டர் கண்மணி ஆகியோர் பணம் கொண்டு வந்த கிரகரி கென்னடியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் அந்த பணத்தை தன்னுடைய மைத்துனர் கொடுத்ததாகத் தெரிவித்தார். அவரை பிடித்து கேட்டபோது அவர் குலசேகரத்தை அடுத்த திருவரம்பைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தை தான் கென்னடிக்கு கொடுத்தகாகவும் கூறினார். உடனே திரவரம்பு நபரை பிடித்து விசாரித்தபோது டாக்டர் ஒருவருக்கு தனது நிலத்தை விற்றபோது அவர் கொடுத்த பணம் தான் இது என்றார். போலீசார் டாக்டரை பிடித்து விசாரித்தனர்.
இறுதியில் வங்கிக்கு கள்ள நோட்டுகளை கொண்டு வந்த கிரகரி கென்னடியை கைது செய்தனர். அவரது சொந்த ஊர் திங்கள்சந்தையை அடுத்த காரங்காடு ஆகும். செட்டிகுளம் பகுதியில் பேட்டரி கடை நடத்தி வருகிறார். இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications