மோசடி நிறுவனத்தை காப்பாற்ற ரூ.10 கோடி கேட்டு மிரட்டி ரூ.2.85 கோடி வாங்கிய ஐ.ஜி. பிரமோத் குமார்
டெல்லி: மோசடி நிறுவனத்தை காப்பாற்ற முயன்றதற்காக சிபிஐயால் கைது செய்யப்பட்ட ஐ.ஜி. பிரமோத் குமாரை வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூரில் பாசி என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்நிறுவனம் சுமார் ரூ.1,500 கோடி மோசடி செய்தது என்று குற்றம் சாட்டப்பட்டது. அந்நிறுவனத்தில் சுமார் 30,000 பேர் பணத்தை கட்டி ஏமாந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்த வழக்கை முதலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரி்த்து வந்தனர். ஆனால் இந்த வழக்கில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க போலீசாருக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாறியது. லஞ்சப் புகார் தொடர்பாக திருப்பூரில் பணியாற்றிய துணை எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ் மற்றும் சண்முகய்யா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் சஸ்பெண்டும் செய்யப்பட்டனர்.
இந்த மோசடி நடந்தபோது மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத் குமார் பாசி நிறுவனத்தை காப்பாற்ற முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சென்னை மற்றும் பீகார் மாநிலம் பகல்பூரில் உள்ள பிரமோத் குமாரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் குறித்து அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே பிரமோத் குமார் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை விசாரித்த நீதிபதி அதை கடந்த 20ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பிரமோத் குமார் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து. கடந்த செவ்வாய்கிழமை இரவு சிபிஐ அதிகாரிகள் டெல்லி சென்றனர். நேற்று காலை அவரை ஹோட்டலில் சந்தித்து விசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை கோவைக்கு கொண்டு செல்ல அனுமதி கோரினர்.
நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து விமானம் மூலம் அவரை இன்று கோவைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து இன்று காலை அவரை கோவையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 17ம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரை சென்னை சிறைக்கு மாற்றவும் நீதிபதி உத்தரவிட்டார். பிரமோத் குமாரை சிபிஐ தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக டெல்லியில் கைதானவுடன் அவரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது பாசி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அந்நிறுவன பங்குதாரர்களிடம் அவர் ரூ.10 கோடி லஞ்சம் கேட்டு மிரட்டியதும், அதில் முதல் கட்டமாக ரூ. 2 கோடியே 85 லட்சம் பணம் பெற்றுக் கொண்டதும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications